lundi 22 avril 2013

இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடா தென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

   இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. 

   அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

   இந்த விவகாரமானது இலங்கை அரசுக்கு பெரும் சர்ச்சையாக மாறியதுடன், சீனா உள்ளிட்ட பல தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததாகவும் அறிய முடிகின்றது. 

   இதனையடுத்தே, கொழும்புடன் கலந்தாலோசிக்காது எவ்வித இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என தமது இராஜதந்திரிகளுக்கு இலங்கை பணிப்புரை விடுத்துள்ளது. 

   இதன்படி இனிவரும் காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. 

   அதேவேளை, இராஜதந்திர கோட்பாடுகளுக்கு அப்பால் செயற்பட்டமை குறித்து அரசு, ஜாலிய விக்கிலமசூரியவை கடுமையாகக் கண்டித்திருக்கிறது என்றும் அறிய முடிகின்றது. 

   நாட்டுக்கு எதிராக கடும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில், தூதுவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டால் அது மேலும் அழுத்தங்களை உண்டுபண்ணும். இந்த விடயம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே அரசு இராஜதந்திர செயற்பாடுகளுக்கு புதிய சுற்றறிக்கையை வகுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire