vendredi 1 août 2014

ராஜீவ்காந்தி பிரபாகரனை நம்பினார், ஆனால் பிரபாகரன் அவரை ஏமாற்றிவிட்டார்;நட்வர்சிங் வெளியிட்டுள்ள இரகசியங்கள்

சிறிலங்கா விவகாரத்தில், ராஜீவ்காந்தி கடைப்பிடித்த கொள்கையே அவரது படுகொலைக்கு காரணமானது என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். 

ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த செவ்வியில், இதுகுறித்து விபரித்துள்ளார். 

1987ம் ஆண்டு, இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவதற்குக் காரணமாக அமைந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில், செய்து கொள்ளப்பட்ட, இந்திய- சிறிலங்கா உடன்பாடு குறித்து, நட்வர்சிங் தனது செவ்வியில் குறிப்பிடுகையில், 

“அவருக்கு தவறான ஆலோசனை கூறப்பட்டது. 

அமைச்சரவைக்கோ, மூத்த அதிகாரிகளுக்கோ தெரிவிக்காமல், இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்ப ராஜீவ்காந்தி உத்தரவிட்டார். 

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையினர் என்ன செய்யப் போகிறார்கள் என்று எந்த தயார்படுத்தலுமே மேற்கொள்ளப்படவில்லை. 

இந்தியாவினது கொள்கைக்கு அது பொருத்தமானதாக இருக்கவில்லை. 

ராஜீவ்காந்தி சிறிலங்கா விவகாரத்தில் பொருத்தமான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை. 

அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் தனது கொள்கைப்படி செயற்பட்டார்.

இந்தியா தனது கொள்கைப்படி செயற்பட்டது. 

சிறிலங்கா பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காணலாம் என்று ராஜீவ்காந்தி நம்பினார். 

ராஜீவ்காந்தி இரகசியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். 

அவர் பிரபாகரனை நம்பினார், ஆனால் பிரபாகரன் அவரை ஏமாற்றிவிட்டார். 

ராஜீவ்காந்தி கொழும்புக்குச் சென்றிருந்த போதே, இந்தியப் படைகளை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. 

இன்றிரவு ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கவுள்ளது என்றும், அதற்கு உங்களின் உதவி தேவை என்றும், இல்லாவிடின் நிலைமை கையை மீறிச் சென்று விடும் என்றும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தன்னிடம் கூறியதாக ராஜீவ்காந்தி தெரிவித்தார். 

சிறிலங்காவில் தனது படையினரை இழந்தது இந்தியாவின் கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. 

சிறிலங்கா விவகாரம் தவறாக கையாளப்பட்டதால் தான், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். 

1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி மீண்டும் பதவிக்கு வருவார் என்பது தெளிவாக இருந்தது.அதனால் தான் அவர் கொல்லப்பட்டார். 

சிறிலங்கா விவகாரத்தில் அவரது கொள்கையின் தவறே அவரது கொலைக்கு காரணமானது. 

அதற்காக அவர் திறமையற்றவர் என்றில்லை. 

அவர் அதிகம் நம்புபவராக இருந்தார். 

அரசியல்வாதி அதிகம் நம்புபவராக இருக்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire