mardi 5 août 2014

பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போவது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையால்

ஐக்கிய நாடுகள் சபையானது உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்நிலையில் இதன் உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்படும் போது அதன் விளைவானது செயலற்றதாக மாறிவிடுகிறது. 

இவ்வாறு பிபிசி செய்தி நிறுவனத்திற்கு Nick Bryant எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

காசாவில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஏன் மேலதிகமாக எதனையும் செய்யவில்லை? சிரியா, ஈராக், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தென்சூடான், லிபியா மற்றும் உக்ரேன் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஏன் ஐ.நா முன்னெடுக்கவில்லை? 

இந்தக் கேள்விகளுக்கு ஐ.நா அதிகரிகள் தாமாகவே பதிலைத் தேடிக்கொள்ள வேண்டும். இவ்வாறான தேடலானது ஆர்வத்தையும் அதிருப்தியையும் உண்டுபண்ணுவதாக அமையும். உலக நாடுகள் பலவற்றில் உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்ற போது ஐ.நாவானது அம்முரண்பாடுகளைக் களைந்து நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அனுசரணையாளராகச் செயற்பட்ட தருணங்களை நினைவுகூருவது மிகக் கடினமாகும். "ஏன் ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை?" என வார இறுதியில் 'நியூயோர்க் ரைம்ஸ்' பத்திரிகையில் தலையங்கத்தில் வினவப்பட்டிருந்தது. 

அனைத்துலக சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐ.நா இராஜீக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனக் கருதமுடியாது. பெப்ரவரி மாதத்தில், கிறிமியா குடாநாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் மிக வெற்றிகரமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதானது ஐ.நா பாதுகாப்புச் சபையானது 1946ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் செய்த மிகப் பெரிய சாதனையாகக் காணப்படுகிறது. 

கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழகைளில், ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் நள்ளிரவு வரை ஒன்றுகூடி அனைத்துலக நெருக்கடிகள் தொடர்பாக உரையாடியுள்ளனர். கடந்த வராரம் 40 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், பாதுகாப்புச் சபையின் 15உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர். வழமையில் ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் மந்தமானதாக இருந்தாலும் இவ்வாண்டு அது வழமைக்கு மாறானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் முடிவு என்ன? கடந்த திங்கள் காலையில் பாதுகாப்புச் சபையானது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்தது. ஆனால் இதனை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அலட்சியம் செய்தன. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் விரைவான இராஜதந்திர நகர்வானது இதுவரையில் ஒரு நிலையான பெறுபேற்றை வழங்கவில்லை. ஏழாவது ஆண்டில் தனது செயலாளர் நாயகப் பதவியைத் தொடரும் பான்கீ மூனின் செயற்பாடுகள் பயனற்றதாகவே காணப்படுகின்றன. காசா தொடர்பில் பான் கீ மூனால் நாளாந்தம் வெளியிடப்படும் அறிக்கைகள் மக்களால் செவிமடுக்கப்படவில்லை. 

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் வினைத்திறனற்றதாகக் காணப்படுவதற்கு இதன் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்காமையே காரணமாகும். ஐக்கிய நாடுகள் சபையானது உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்நிலையில் இதன் உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்படும் போது அதன் விளைவானது செயலற்றதாக மாறிவிடுகிறது. இந்த நாடுகளின் ஒத்துழைப்பின்மை ஐ.நா வுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது. 

நியூயோர்க்கின் East River இன் கரையில் அமைந்துள்ள 39 மாடிக்கட்டடத்தில் உள்ள ஐ.நா தலைமையகமானது நவீன கால Babel கோபுரம் போன்று உள்ளது. ஆனாலும் உறுப்புரிமை நாடுகளால் இழைக்கப்படும் தவறே ஐ.நாவின் தோல்விக்குக் காரணமாகும். "அனைத்துலக விவகாரங்களில் தவறுகள் ஏற்படும் போது ஐ.நா வைக் குற்றம் சுமத்துவதானது நியூயோர்க் நகரின் கூடைப்பந்து அணியினர் மிக மோசமாக விளையாடும் போது Madison Square Garden மைதானத்தைக் குற்றம் சுமத்துவதற்கு ஒப்பானதாகும்" என ஐ.நா வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் றிச்சார்ட் ஹொல்புறூக் விபரித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை எதனையும் செயற்படுத்தாமல் இருக்கவில்லை. தற்போது காசாவில் இடம்பெறும் மோதல்களின் விளைவாக, 180,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஐ.நா முகாங்கள் அமைத்துப் பராமரிக்கிறது. காசாவில் பணிபுரிந்த போது குறைந்தது ஐந்து வரையான ஐ.நாப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

மோதல் இடம்பெறும் நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிகளை வழங்கும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு நிறுவனம் (OCHA) போன்ற ஐ.நா அமைப்புக்களுக்கும் இவ்வாறான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் தனது இராஜதந்திரத்தின் மூலம் குழப்பும் பாதுகாப்புச் சபை போன்ற ஐ.நா அமைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளங் காண்பது மிகவும் முக்கியமானதாகும். 

அசாட் அரசாங்கத்தின் அனுமதியின்றி சிரியாவின் எல்லைகளில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதாவது இரண்டு மில்லியன் வரையான மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை OCHA பல மாதங்களாக மேற்கொண்டுவருகிறது. ஆனால் சிரியாவின் இறையாண்மை மீறப்படுவதாக ரஸ்யா கவலைகொள்வதால் பாதுகாப்புச் சபையில் சிரியாவில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பல மாத காலங்கள் இழுபறி நிலை காணப்படுகிறது. ரஸ்யாவின் இந்த ஒத்துழைப்பின்மையானது சிரியாவில் நிலவும் பிரச்சினையைத் தணிப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. பாதுகாப்புச் சபையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை செய்திகளாக்க முடியாது, அதன் தோல்வியுறும் நடவடிக்கைகளை செய்தியாக்க வேண்டிய நிலையில் அனைத்துலக ஊடகங்கள் உள்ளன. 

அமெரிக்கா, ரஸ்யா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் சீனா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பாதுகாப்புச் சபையின் செயற்பாடுகள் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலையில் உள்ளமை கண்கூடாகும். பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து இதுவரையில் ஐக்கிய அமெரிகக்h தனது வீற்றோ அதிகாரத்தை 14 தடவைகள் பயன்படுத்தியுள்ளது. இதனை ரஸ்யா 11 தடவைகள் முறித்துள்ளது. இவ்விரு நாடுகளும் பாதுகாப்புச் சபையில் தமக்குள்ள வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கூட்டணி நாடுகளைக் காப்பாற்றி வருகின்றன. அமெரிக்கா இஸ்ரேலையும், ரஸ்யா சிரியாவையும் பாதுகாத்துள்ளன. பாதுகாப்புச் சபையில் வரையப்பட்ட பல பரிந்துரைகள் வீற்றோ அதிகாரத்தால் இன்னமும் வாக்களிப்பிற்குக் கூட விடப்படவில்லை. 

ரஸ்யாவானது கிறிமியா விவகாரத்தில் எடுத்துக்கொண்ட தீர்மானமானது அண்மைய மாதங்களில் பாதுகாப்புச் சபையில் பனிப்போர் உருவாவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. பாதுகாப்புச் சபையானது உறுதியான, பயனுள்ள இராஜதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அமைப்பாகக் காணப்படாது வான் தாக்குதல்கள் மற்றும் வர்த்தக விவகாரங்களை முறைப்பாடு செய்கின்ற ஒரு இடமாக மாறிவருகிறது. 

மலேசிய விமானமான ஆர் 17 சுட்டு வீழ்த்தப்பட்டமையானது பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட மிக மோசமான விவகாரமாகும். அதாவது பாதுகாப்புச் சபையானது முற்றிலும் செயலிழந்துள்ளது என்பது இங்கு கூறப்படவில்லை. அதாவது சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான தடை விதித்தல் தொடர்பில் கடந்த செப்ரெம்பரில் தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இது பாதுகாப்புச் சபையின் முக்கிய நகர்வாகக் காணப்படுகிறது. மத்திய ஆபிரிக்கக் குடியரசிற்கு நீல முகமூடி அணிந்த சமாதானப் படையை அனுப்புவதற்கான உடன்பாடும் பாதுகாப்புச் சபையில் எட்டப்பட்டது. 

ஆப்கான் மற்றும் ஈராக்கில் நீண்ட காலப் போரை முன்னெடுத்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவானது உலகின் காவற்துறை என்ற பங்கை வகிப்பதற்கும் தனது இராணுவ அதிகாரத்தை வழங்குவதிலும் தயக்கம் காண்பிக்கின்றமை தெளிவாகிறது. ஒபாமா நிர்வாகமானது ரெல் அவிவ், கெய்ரோ, காபுல் அல்லது பக்தாத் இவற்றின் மீதான தனது இராஜதந்திர முயற்சியைக் குறைத்து வருகிறது. 

அமெரிக்காவின் இத்தகைய பலவீனத்தின் மூலம், ரஸ்யாவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கான வழிகளை விளாடிமிர் புற்றின் ஆராய்ந்துள்ளார். இதன் முதற்கட்டமாக ரஸ்யா, கிறிமியா விவகாரத்தில் தலையீடு செய்துள்ளது. இதன்மூலம் பனிப்போரின் முடிவில் உருவாக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கானது ரஸ்யாவின் இப்போக்கால் குலைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

ஆகவே ஐக்கிய நாடுகள் சபையானது தனது உறுப்பு நாடுகளின் செயற்பாடுகள் ஒரு புறம் வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்கின்ற அமைப்பாகவும் மறுபுறம் தோல்விகளைத் தரும் ஒரு அமைப்பாகவும் காணப்படுகிறது. ஆனால் இதற்கான முக்கிய காரணம் இதன் உறுப்பு நாடுகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளாகும். இந்த நாடுகள் ஐக்கியமாகச் செயற்படாது பிளவுபட்டுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire