mardi 11 septembre 2012

மீட்கப்பட்டஇலங்கை அகதிகள் 87 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்


இந்திய குடியுரிமை வேண்டும் என கோரிக்கை
mangalooreஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 18 பெண்கள் உள்பட 87 இலங்கை தமிழ் அகதிகள் மங்களூரில் மீட்கப்பட்டனர். அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, பாணாவரம் அகதிகள் முகாம், மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாம், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றை சேர்ந்த 84 பேர் நேற்று முன்தினம் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற போது மங்களூர் போலீசாரால் மீட்கப்பட்டனர். வெளிநாட்டுக்கு கூட்டி செல்வதற்காக அகதிகளிடம் தலா 1 லட்சம் பணம் வசூலித்த 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் 2 பஸ்களில் தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை கொண்டித்தோப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தனர். அதில் 18 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உள்பட மொத்தம் 87 பேர் அடங்குவார்கள்.
மீட்கப்பட்ட அகதிகள் மீதான நடவடிக்கை பற்றி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு கூறுகையில்,`` மங்களூரிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள அனைத்து இலங்கை தமிழ் அகதிகளையும் அந்தந்த முகாம்களுக்கு அழைத்து செல்ல போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். அகதிகளை அழைத்துச் செல்லும் அதிகாரிகள், அவர்களை முகாம்களில் கொண்டு சேர்த்தவுடன் அதற்குரிய அத்தாட்சி அட்டை அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இந்த அத்தாட்சி அட்டையை சென்னையில் உள்ள மக்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்.'' என்றார்.
அகதிகள் கருத்து
மீட்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளில் ஒருவர் கூறியதாவது:-எனது பெயர் ராஜபாண்டி. நான் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தேன். அங்கு ஒரு சிறிய டீக்கடை நடத்தினேன். எனது மகளுக்கு 32 வயதாகிறது. அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும். இந்த தொழில் மூலம் வயிற்றை நிரப்பும் அளவுக்குத்தான் வருமானம் வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்று எதாவது வேலை செய்தால் இங்கு சம்பாதிக்கும் ஒரு ரூபாய்க்கு ஈடாக 58 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று கூறினார்கள். எனவேதான் நானும் எனது மகள் சுபாஷினியும் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்தோம்.
எனது பெயர் சுபாஷினி. நாங்கள் கடந்த 22 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். தமிழ் அகதிகளுக்கு இங்கே உயர் பதவிகளில் வேலை தரமறுக்கிறார்கள். இதனால் பல்வேறு பட்டதாரிகள் பெயிண்டிங் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்திய குடியுரிமை வேண்டும்
அதே வேளையில் தலைவர்கள் வருகையின்போது இலங்கை தமிழ் அகதிகள் 3 நாட்கள் முகாம்களை விட்டு வெளியே வரக்கூடாது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இங்கே உள்ள முகாம்களில் இருக்கின்றன. எனவேதான் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோம்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் போலீசார் மோசமான சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் எங்களை வற்புறுத்தி அழைத்து செல்லவில்லை. நாங்களாக விரும்பிதான் ஒரு லட்சம் கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோம். இந்தியாவில் எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். அதன்மூலம் நாங்கள் முறையாக பாஸ்போர்ட் எடுத்தே வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்
கொண்டித்தோப்பு சமுதாய நலக்கூடத்தில் அனைத்து அகதிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து அகதிகளும் மாலை 4 மணிக்கு அரசுபஸ் மற்றும் போலீஸ்வேன் மூலம் கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து வெவ்வேறு பஸ்களின் மூலம் அந்தந்த முகாம்களுக்கு அகதிகளை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.



Aucun commentaire:

Enregistrer un commentaire