samedi 22 septembre 2012

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்ரிக்கா ஜேன்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.


பிரட்ரிக்கா தனது செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன் அப்பத்திரிகை நிறுவனத்தின் புதிய உரிமையாளரான அசங்க செனவிரத்னவிடம் காட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினாலேயே அவர் பதவி விலக்கப்பட்டதாக சண்டே லீடர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லால் விக்கிரமதுங்க தெரிவித்ததாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பிரட்ரிக்கா வெளியிடும் செய்திகளில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு புதிய உரிமையாளரான அசங்க செனவிரத்னவினால் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் உடன்படாத காரணத்தினாலேயே பதவி விலக்கப்பட்டுள்ளதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரமத ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அப்பதவிக்கு பிரட்ரிக்கா ஜேன்ஸ் நியமிக்கப்பட்டார்.

அரசாங்கத்துக்கு எதிராக செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று அசங்க செனவிரத்ன தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும், தான் அதனை ஏற்றுக்கொள்ளதாத காரணத்தினாலேயே தற்போது பதவி விலக்கப்பட்டுள்ளதாகவும் பிரட்ரிக்கா ஜேன்ஸ் பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான சர்ச்சைக்குரிய நேர்காணல் மற்றும் கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடனான உரையாடலின் போது அவர் தன்னை மோசமாகத் திட்டியதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரட்ரிக்கா ஜோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire