mardi 18 septembre 2012

அன்றறுத்த சம்பந்தனும் நின்றறுத்த ஹக்கீமும் !


தமிழ் மக்களின் இனப்பிரச்சினை  தொடர்பாக சிங்கள தலைவர்கள் பலவிதமான கருத்துக்களை கொண்டிருந்தனர். சிலர் தமிழ் மக்களுக்கு பிரச்சினையே இல்லை என்றனர். சிலர் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒத்துக்கொண்டனர், ஆனால் தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. சிலர் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒப்பந்தங்கள் செய்து பின்னர் துப்பிய எச்சில் காயுமுன்னே ஒப்பந்தங்களை கிழித்தெறிந்தனர். சிலர் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்றனர் வீராப்பு பேசினார்கள்….
ஆனால் சந்திரிக்கா அம்மையாரோ  தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது அது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என தென்னிலங்கை தேர்தல் மேடைகளில்  பேசிவந்தார்கள். அரசியல்வாதிகள் என்பவர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை  அள்ளிக்கொட்டுவதும் தேர்தல் முடிந்ததும் மறந்து விடுவதும்  தான் வழமை .ஆனால் சந்திரிக்கா அம்மையாரோ     தேர்தல் முடிந்ததும் தீர்வுப்பொதி ஒன்றை தயாரித்து, அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருந்தார்கள். இலங்கையின் வரலாற்றில் தமிழரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக வகையில் சந்திரிக்கா அம்மையாரினால் முன்வைக்கப்பட்டது போன்ற  ஒரு தீர்வை எவரும் முன்வைக்கவும் இல்லை இனிமேலே முன்வைப்பார்கள் என்றும் கூறமுடியாது.   சந்தர்ப்பங்கள் என்பது திரும்ப திரும்ப காலடியில் வருவதில்லை. இப்பேற்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் வரும்போது தமிழ் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளுகிறவர்கள் இனப்பிரச்சினை உண்மையிலே தீர்க்கப்படவேண்டும் என எண்ணியிருந்தால், தொலைனோக்கிருந்திருந்தால் அதை  இறுக  பற்றி பிடித்திருக்க வேண்டும். சந்திரிக்கா அம்மையாரின் கரத்தை பலப்படுத்தி  பாராளுமன்றத்திலே அதை நிறைவேற்றப்பண்ணியிருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுகிறோம் என்று தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைமை, இனவாத கட்சியான UNP யுடன் சேர்ந்து பொன்னான சந்தர்ப்பத்தை குழப்பியடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இளைத்தது. இங்கே வேடிக்கையான விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற கூட்டணியினர், தமிழ் மக்களுக்கு இழைத்த இந்த துரோகத்தைப்பற்றி தமிழ் மக்களின் அழிவில் பிழைப்பு நடத்தும் ஊடகங்கள் இந்த அநீதி தொடர்பாக ஒரு வரி தனிலும் எழுதவில்லை.
இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால், தீர்வுப்பொதியானது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் முன்னர்    சந்திரிக்கா அம்மையார் சம்பந்தன் ஐயா அவர்களிடம் சம்பாஷித்தபோது தீர்வுப்பொதியானது எவ்வளவோ நல்ல அம்சங்களை கொண்டிருப்பதால் நிச்சயம்  ஆதரவு தருவதாக உறுதியளித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் 2000 ம் ஆண்டு தீர்வுப்பொதியானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல் நாள், சந்திரிக்கா அம்மையார் சம்பந்தன் ஐயா அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இதங்களது உயர்மட்ட குழு கலந்தாலோசித்த பின்னர்  முடிவு  சொல்வதாக கூறினார். பின்னர் சந்திரிக்கா அம்மையார் சம்பந்தன் ஐயாவுடன் பல தடவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை. இறுதியாக ஏறத்தாள நள்ளிரவுக்கு சற்று முன்னர், தமது உயர்மட்ட குழு ஆதரவு அளிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாக     சம்பந்தன் ஐயா அவர்கள் சந்திரிக்கா அம்மையாருக்கு தெரிவித்தார். தனது அரசியல் எதிகாலம் பாதிப்புக்குள்ளாக்கப்படும் என்பது பற்றி கவலைப்படாது தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணிய சந்திரிக்கா அம்மையாருக்கு இது ஒரு பேரிடியாக இருந்தது.   தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என இதமிழ் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளுபவர்கள் வாய் கிழிய கத்துவது வெறும் அரசியலுக்காகத்தான்  என்பது அன்று தான் சந்திரிக்கா அம்மையாருக்கு புரிந்தது.
சந்திரிக்கா அம்மையார் போன் பண்ண…போன் பண்ண…சம்பந்தன் ஐயா சந்திரிக்கா அம்மையாரை அன்றறுத்தார்… சம்பந்தன் ஐயா போன் பண்ண …போன் பண்ண….ஹக்கீம் நானா சம்பந்தன் ஐயாவை நின்றறுக்கிறார் இன்று.
பொன் வாதவூரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire