samedi 15 septembre 2012

காக்க வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை ஏய்த்தது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாணசபையில் கூட்டணி ஆட்சியை அமைப்பது தொடர்பாக நேற்று நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த பேச்சுக்களில் பங்கேற்காமல் முன்னறிவிப்பின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கியதால், பேச்சுக்களுக்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது. 

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், 

“நேற்றிரவு கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்தச் சந்திப்புக்கான நேரம் தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையில் ஏற்கனவே இணக்கம் ஏற்பட்டிருந்தது. 

இதையடுத்து நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்காக நீண்டநேரமாகக் காத்திருந்தோம். 

ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வரவில்லை. 

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - ரவூப் ஹக்கீமுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், பதில் வரவில்லை. 

ஒருகட்டத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரியே பதிலளித்தார். 

அவர் தொலைபேசியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலர் ஹஸன் அலியிடம் கொடுத்தார். 

நாம் சந்திப்புக்காக காத்திருக்கும் விடயத்தை அவரிடம்  கூறினார் சுமந்திரன். 

தாமும் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் அலரி மாளிகை சந்திப்பு ஒன்றில் இருப்பதால், தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் வந்ததும் சொல்வதாக ஹஸன் அலி  கூறினார். 

ஆனால் நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்கவில்லை. 

அதன் பின்னர், தொடர்பு கொள்ள முயன்றபோது, அனைவரது தொலைபேசிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

எம்முடனான சந்திப்பை அநாகரிகமான முறையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்திருக்கிறது. 

நாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்திருக்கலாம், எங்களை காத்திருக்க வைத்து அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொண்டமை வருத்தமளிக்கிறது“ என்று தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire