vendredi 14 septembre 2012

சிங்களவர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது - முதல்வர் ஜெயா

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதி உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

ஸ்ரீரங்கத்தில் இன்று (13) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. 

இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன். 

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். 

இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. 

ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார். 

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 

இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார். 

தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா

Aucun commentaire:

Enregistrer un commentaire