lundi 24 septembre 2012

கிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண அமைச்சர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. 

இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 

எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 

விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

ஹாபிஸ் நஸீர் அஹமட்- விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் - சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 

அதேவேளை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் - நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

இவ்வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire