mardi 15 janvier 2013

நாளை ஜனாதிபதியின் முன்னிலையில் பதவியேற்பு?புதிய பிரம நீதியரசராக மொஹான் பீரிஸ்


இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகருமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் புதிய நீதியரசராக நாளை செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என்றும் தெரியவருகிறது. 

தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்குவதாக ஜனாதிபதியினால் அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக பல்வேறு தகவல்களும் ஊர்ஜிதப்படுத்தப்படாமல் வெளியாகிக்கொண்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு தகுதியானவர்கள் என மொஹான் பீரிஸ் உட்பட மூவரது பெயர்கள் நாடாளுமன்ற பேரவையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 
18ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்த கூட்டத்திலேயே புதிய பிரதம நீதியரசரின் பெயரை இந்த பேரவை சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் அவர் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire