dimanche 20 janvier 2013

சிலைகள், வழிபாட்டிடங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை

சாலைகள் என்பது யாருடைய சொத்தும் அல்ல. சாலைகளில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் போய்வர மக்களுக்கு உரிமை உள்ளது. வழிபடுவதற்குரிய இடத்தைக் கட்டுவதாகக் கூறிக்கொண்டு மக்களுடைய அந்த உரிமையைப் பறித்துவிட முடியாது."சாலைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலை உருவாக்கக்கூடிய இடங்களில் சிலைகளோ வழிபாட்டிடங்களோ வைக்கப்படுவதற்கு மாநில அரசுகள் அனுமதி வழங்கத் தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு அரசியல் தலைவரின் சிலையை நிறுவ மாநில அரசு அனுமதி அளித்திருந்த முடிவை எதிர்த்து போடப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்தச் சிலை நிறுவப்படும் வேலை நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.கூடவே போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக்கூடிய பொதுவிடங்களில் சிலைகள், வழிபாட்டு இடங்கள் போன்றவை அமைக்கப்படுவதற்கு எந்த ஒரு மாநில அரசும், யூனியன் பிரதேச அரசும் அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
சாலைகளிலும் பொதுவிடங்களிலும் முன் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களை மாநில அரசுகள் அகற்ற வேண்டும் என இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பொதுமக்களின் நலனுக்குத்தான் அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். சாலைகள் என்பது யாருடைய சொத்தும் அல்ல. சாலைகளில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் போய்வர மக்களுக்கு உரிமை உள்ளது. வழிபடுவதற்குரிய இடத்தைக் கட்டுவதாகக் கூறிக்கொண்டு மக்களுடைய அந்த உரிமையைப் பறித்துவிட முடியாது" என நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு தொடர்பில் பொதுநல வழக்குகள் மூலம் போராடிவரும் ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வரவேற்றுள்ளார்.
சிலைகள் அமைப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்துப் பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வுழிப்புணர்வு வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire