vendredi 16 novembre 2012

13ஆவது திருத்தத்தில் எவரையும் தலையிடவிடாது ஜனாதிபதி உறுதியுடன் இருக்க வேண்டும்.வீ.ஆனந்தசங்கரி


13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் எவரையும் தலையிட ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான வரலாற்றை அறியாதவர்கள் புதிய பிரச்சினைகளை உருவாக்குவதுடன் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தை கைவிடும்படி திடீர் கோரிக்கையை விடுப்பதாக வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை உடன் நிறுத்தத் தவறும் பட்சத்தில் கட்டுப்படுத்த முடியாத பெரும் பூதாகரமான நிலை நாட்டில் உருவாகலாம் என ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் நாட்டில் அமைதியும் சமாதானமும் திரும்பவில்லை என தெரிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி, வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் நிரந்தர பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆலோசனைகளை அவமதிப்பதாக கருதாமல் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ள வீ.ஆனந்தசங்கரி, 13ஆவது திருத்தத்தில் எவரையும் தலையிடவிடாது ஜனாதிபதி உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire