lundi 26 novembre 2012

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இன விவசாயிகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டாம்.சிவநேசதுரை சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மேய்ச்சல் தரை காணியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இன விவசாயிகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண முன்னாள் முதமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை கேட்டுள்ளார். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லை பிரதேசத்திலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் தரைக்கான காணி பல வருடங்கள் கடந்தும் இதுவரை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவில்லை. 
கிழக்கில் போர் ஒய்ந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும் தீர்வு இல்லாத பிரச்சனையாக இது தொடர்வது குறித்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதமைச்சரான சந்திரகாந்தன் எதிர்வரும் ஆண்டுக்கு முன்னர் நிர்வாக ரீதியாக சுமுகமான முறையில் தீர்வு காணவேண்டும் என தான் இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் எழுத்து மூலமும் தொலைபேசி ஊடாகவும் கேட்டுள்ளதாக கூறினார். 
சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் சென்றபோது, சுமார் 500 ஏக்கரில் தானிய செய்கையில் குறித்த செய்கையாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்ததாகவும் இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் பயிர் செய்கையில் ஈடுபட வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு 20 மைல்களுக்கு அப்பாலும் அம்பாறை மாவட்ட தெகியத்தகண்டிய பிரதேச சிங்கள விவசாயிகளுக்கு 2-3 மைல்கள் தூரத்திலும் இந்த காணி இருப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார். 
பயிர்செய்கையாளர்களுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இருதரப்பையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்ப்டடுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire