dimanche 17 février 2013

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு புரட்சிகரமான அரசியல் தீர்வு

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு புரட்சிகரமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

யாழ். உதயன் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொது எதிரணி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

'இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கு ஒரு யோசனையை நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். அதாவது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

'அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளினால் மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுப்போம்' என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். 

இலங்கையில் அனைத்து அனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு புரட்சிகரமான அரசியல் தீர்வை நாங்கள் முன்வைக்கவுள்ளளோம் இதற்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் கட்சிக்குள்ளும் ஏனைய அரசியல் தலைவர்களிடமும் தெளிவுபடுத்தவுள்ளோம்' என்றார்.
 
'ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சமஷ்டி தீர்வை முன்வைத்தீர்கள். அவ்வாறானதொரு தீர்வை ஏன் இப்போது முன்வைக்க முடியாது' என்று ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு, '2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது சமஷ்டித் தீர்வை முன்வைத்தோம்.  இதனை விடுதலைப் புலிகள் நிராகரித்ததோடு ஆட்சி மாற்றத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர்' என்று ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், விக்கிரமபாகு கருணராட்ண, அஸாத் சாலி ஆகியோர் கலந்துகொண்டனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire