lundi 18 février 2013

பொதுமக்களை கொல்வதல்ல – சிறிலங்கா மீது நவநீதம்பிள்ளை சீற்றம்

இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் உள்ள சண்டேலீடர் ஊடகவியலாளர் பரஸ் சௌகத் அலிக்கு பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். 

சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 

“இது ஊடகவியலாளரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி.  எனவே, அவர் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். 

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நான் கலக்கமடைந்துள்ளேன். 

ஏனென்றால், அவர் ஒரு ஊடகவிலாயளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை. 

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இந்த வகையான நடத்தைகள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு உள்ள தடைகள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு, எனது கரிசனைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளேன். 

இந்தச் சம்பவத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தொடர்புள்ளதா என்று சரியான விசாரணைகளை மேற்கொள்ளாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. 

அதேவேளை, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். 

பொதுமக்கள் நம்பும்படியான நம்பகமான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். 

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். 

நிபுணத்துவ விசாரணைகளுக்கு அவர்களுக்கு உதவ நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதை ஏற்காதது ஏமாற்றமளிக்கிறது. 

இது மோசமானது. ஏனென்றால், சிறிலங்கா அரசாங்கப் படைகள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

அரசாங்கத்தின் பொறுப்பு பொதுமக்களைப் பாதுகாப்பதே தவிர கொல்வது அல்ல.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire