dimanche 11 août 2013

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு, தமிழக அரசே காரணம்,''

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு, தமிழக அரசே காரணம்,'' என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். டில்லியில் இருந்து, நேற்று காலை விமானம் மூலம், அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்தார்.

விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், தமிழகத்தில் சில கட்சிகள், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபடுகின்றன; சிலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்களால், இலங்கைத் தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ, ஒருபோதும் காப்பாற்ற முடியாது. இவர்களால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. இலங்கை அரசு மற்றும் இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளனர். இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலருக்கு, வெளியுறவு அமைச்சகத்திலிருந்து, இரண்டு முறை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு, தமிழக அரசிடமிருந்து, இதுவரை எந்த பதிலும் இல்லை. இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு, தமிழக அரசே காரணம். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, பிரச்னைக்குரிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்கா சக்தி நாக்பால், இதுவரை மத்திய அரசை அணுகவில்லை. அவர் மத்திய அரசை அணுகினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire