mercredi 21 août 2013

விசாரணைகளின் போது சித்திரவதை நிறுத்தப்படவேண்டும்: பசில் ஃபெர்ணாண்டோ

விசாரணைகளின் போது சித்திரவதையை ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவதை இலங்கையில் பொலிஸார் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை பொலிஸாரினால்  சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது. இதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, மிகவும் அதிக சித்திரவதைக்கு ஆளான 400 பேர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் பொலிஸாரின் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கை அரசுக்கு உதவ சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் தமது ஆணையம் கோரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட, காவல்துறையினரால் தாங்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த ஆணையத்திடம் சாட்சியளித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலின் பாதிப்பு இன்றளவும் உள்ளது என்று சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஆணையம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பொலிஸார் , பலரை நிர்வாணமாக்கி கொடுரூரமாக தாக்கியதாகவும், அதன் தாக்கம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தொடருகிறது எனவும் சாட்சியம் அளித்த பலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படியாக சித்திரவதைகளை எதிர்கொண்டவர்களின் கதையை அவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இதை தாங்கள் முன்னெடுத்ததாகவும் பசில் ஃபெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire