mardi 19 mars 2013

வடக்கில் அரச 'ஆதரவு' பேரணிகள்;சிறிலங்கா சுதந்திர கட்சியினரும் சிறிடெலோ கட்சியினரும்


ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்ற வேளையில், உள்நாட்டில் குறிப்பாக வடபகுதியில் அரசுக்கு ஆதரவாகவும், ஜெனிவா மாநாட்டுக்கு எதிராகவும் பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆளும் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களும், அரச ஆதரவு கட்சியாகிய சிறிடெலோ கட்சியினரும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதிலும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

எனினும் மீள்குடியேற்றப்பகுதிகளில் காணிப்பிரச்சினைகள், வீடில்லா பிரச்சினைகள், போன்றவை மட்டுமல்லாமல், காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படாமை சிவில் நிர்வாகத்திலும் பொதுமக்களின் வாழ்க்கையிலும் இராணுவத்தின் தலையிடுவது போன்ற பல பிரச்சினைகள் இப்போது வடக்கில் முனைப்பு பெற்றிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்திய பகுதியில் தமிழ் குடும்பங்கள் குடியிருந்த பிரதேசத்தை உள்ளடக்கியதாக பெருமளவு காணிகளில் முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் முறையிட்டிருக்கின்றார்கள்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த காணிகளற்ற முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகமும், அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்திருக்கின்றார்கள்.

இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்படுபவர்கள் தவிர்ந்த ஏனையோரை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றும்போது, அது மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கவே வழிசமைக்கும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

அதேநேரம் இலங்கையின் எந்தப் பகுதியும் எந்த ஒரு சமூகத்திற்கும் தனித்துவமாகச் சொந்தமானதல்ல என்றும், விரும்பிய இடத்தில் இலங்கையர் எவரும் குடியேறி வசிக்க முடியும் என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்று எவரும் தீர்மானிக்க முடியாது. முல்லைத்தீவு தமிழ் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அங்கு அவர்களை மாத்திரமே அங்கு குடியேற்ற வேண்டும் யாரும் தீர்மானிக்க முடியாது. குணரத்ன வீரக்கோன் அமைச்சர் முல்லைத்தீவில் வசிக்க விரும்பினால் அவர் 40 பேச் காணியைப் பெற்று அங்கு குடியிருக்க முடியும். அதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது. அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க முடியும். சிங்கள மக்களை இங்கு கொண்டு வந்து குடியேற்ற முடியும். ஆனால் அதனை நாங்கள் செய்வதில்லை. செய்யப் போவதுமில்லை. வடக்கில் இருந்து இடம் பெயர்ந்தவர்களில் ஒரு சிங்களக் குடும்பம்கூட இன்னும் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எங்களுக்குத் தொடர்சியாக எங்களைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது இலகுவான காரியமல்ல. பத்து வருடங்கள் சென்றாலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire