mercredi 6 mars 2013

ஏமாற்றம்; அமெரிக்க தீர்மானம் வெளியானது

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடந்த ஆறுமாதங்களாக தமிழ் ஊடகங்களில் பெரும் இடம் பிடித்திருந்தது. இத்தீர்மானத்தின் பிரகாரம்  நாடே கிடைத்து விடப்போகின்றது என தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் இணையங்களில் தம்மை ஆ(வா)ய்வாளர்கள் எனக்கூறிக்கொள்கின்ற சிலரும்; கதையளந்து கொண்டிருந்த நிலையில் அத்தீர்மானத்தின் சாராம்சம் கசிந்துள்ளது. 

அதன் பிரகாரம் குறித்த தீர்மானமானது இலங்கையை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை என்றும் ஒட்டு மொத்தத்தில் இலங்கையின்செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக கருதுகின்றோம், கவலை அடைகின்றோம், சிபார்சு செய்கின்றோம், அவதானிக்கினறோம் என்ற சொற்பதங்களை அடக்கியதாகவே அந்த தீர்மானம் அமைந்துள்ளது. 

அமெரிக்காவின் தீர்மானத்தின் பிரகாரம் ஐ.நா வின் படை ஒன்று இலங்கையில் வந்து குதிக்கும் என கட்டியம் சென்ன சாஸ்திரிமார் யாவரும் இனி என்ன சொல்லப்போகின்றார்கள் என்ற கேள்வியை கேட்பதற்கு முன்னர் குறித்த தீர்மானத்தின் சாராம்சத்தின் மொழிபெயர்பினை வாசகர்களுக்கு சமர்பித்து வாசகர்களே அந்த கேள்வியை கேட்கட்டும் என விட்டுவிடுகின்றோம

• ஐ.நா. பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும், சர்வதேச மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு ஏற்பவும், அது தொடர்பான மற்றைய சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமையவும்,

• இலங்கையில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, மற்றும் இலங்கை அரசுக்கு உள்ள பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19ஃ2 ஐ நினைவுகூர்ந்து,

• தமது நாட்டு குடிமக்களின் சுதந்திரம், மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், உத்தரவாதம் கொடுப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி,

• இலங்கை அரசின் தேசிய செயல் திட்டம் மற்றும் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதன் வாக்குறுதிகளை கவனத்தில்கொண்டு,

• தேசிய செயல் திட்டம் என்பது (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சியின் எல்லாவிதமான பரிந்துரைகளையும் நடைமுறை படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,

• சட்டத்துக்கு விரோதமான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள் கடத்தல்கள் முதலானவை குறித்த நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுதல்; இலங்கையின் வடக்குப் பிரதேசத்திலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது; நிலங்கள் தொடர்பான புகார்கள் குறித்த நடுநிலையான விசாரணையை மேற்கொள்வது; தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து மீள் ஆய்வு செய்வது; முன்னர் சுதந்திரமாக இருந்த சிவில் நிர்வாக அமைப்புகளை பலப்படுத்துவது; மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான அரசியல் தீர்வைக் காண்பது; அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது... ஆகியவை தொடர்பான (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் உருப்படியான பரிந்துரைகளைக் நினைவுபடுத்தி,

• அதேசமயத்தில் இலங்கை அரசின் தேசிய செயல் திட்டமோ, எல்.எல்.ஆர்.சி.யோ, இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து போதிய அளவில் அக்கறை காட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,

• இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாகவும், மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குவது உட்பட, வாக்குறுதிகளை இலங்கை அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலை தெரிவித்து,

1) ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

2) (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சி.யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், இன ஒற்றுமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத் தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேச்சுரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள்கடத்தல் ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி சென்று ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

4) மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்து ஆலோசனை செய்து, அதன் ஒப்புதல் பெற்று, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் மற்றும், அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

5) ஐ.நா மனித உரிமைகள் குழுவின் தலைவர் மற்றும் அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர், இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், இன ஒற்றுமை, பொறுப்பு ஏற்றுக் கொள்ளல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 25-வது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire