mardi 26 mars 2013

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

’ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை உருவானதால், மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் திமுக விலகியது. இதை செயற்குழு முழுமையாக ஏற்கிறது. ஈழத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கான தீர்மானத்தை இந்தியா ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்து சென்று நிறைவேற்ற வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் அறப்போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளை மூடுவதையும், காவல் துறை மூலம் போராட்டம் ஒடுக்கப்படுவதையும் செயற்குழு கண்டிக்கிறது.
 தமிழக மீனவர்களை பாதுகாக்க வலிமையான நடவடிக்கையை மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
ஜனநாயக நெறிகளுக்கு புறம்பாக நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக பங்கேற்காது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு, மக்கள் பாதுகாப்பின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கிய ஜெயலலிதா அரசை வன்மையாக கூட்டம் கண்டிக்கிறது.
தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி நடுவர் மன்றம் உருவாக, இறுதி தீர்ப்பு கிடைக்க, காவிரி நதிநீர் ஆணைய கண்காணிப்பு குழு அமைக்க, தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாக திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சியே காரணம் என்பதால் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் மிக மோசமான மின் தட்டுப்பாடு நிலவுவதை பற்றி கவலைப்படாத ஜெயலலிதா அரசுக்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவறினால் திமுக விவசாய அணி சார்பில் போராட்டம் நடத்தப் படும். தமிழகத்துக்கு கிடைத்த பல்வேறு மகத்தான திட்டங்களில் சேது சமுத்திர திட்டத்தையும் மதுரவாயல் & துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தையும் அதிமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாமையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை செயற்குழு கண்டிக்கிறது.’’
மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Aucun commentaire:

Enregistrer un commentaire