mardi 12 mars 2013

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம். அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி  ஒன்று நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமாகி டிப்போச் சந்திவரை சென்றது. 

'ஏகாதிபத்தியமே எங்களில் கை வைக்காதே', 'அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்', 'இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடு வேண்டாம்', 'எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்',  'எங்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ', 'ஜனாதிபதியை பலப்படுத்துவோம்'; உள்ளிட்ட கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். அத்துடன், அமெரிக்காவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த உறுப்பினர் சச்சி முருகேசு, 

'இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களைக் காரணமாக வைத்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. இலங்கையின் முன்னேற்றத்திலும் இலங்கை மக்களின் மீதான அக்கறையிலும் உண்மையான விருப்பத்தோடு அமெரிக்கா தன்னுடைய தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. இந்தத் தீர்மானம் வெற்றியடைகிறதோ, இல்லையோ நாங்கள் அமெரிக்க அரசியலுக்குப் பலியாகிவிடக் கூடாது' என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire