mardi 4 mars 2014

23 வருடங்களின் பின்னர் இன்று யாழ் தேவி, பளை வரை

வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக கட்டியெழுப்பப்பட்ட வடபகுதி ரயில் வீதியில், யாழ் தேவி, பளை வரை தனது பயணத்தை தொடர்ந்தது. இன்று முற்பகல் 10 மணிக்கு உதயமாகிய சுபவேளையில், கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ். தேவிக்கு மக்கள் பலத்த கரகோசத்துடன் வரவேற்பளித்தனர்.

1985 ஆண்டு கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் வைத்து யாழ்தேவி மீத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து வவுனியா வரை மாத்திரமே ரயில் சேவை இடம்பெற்றது. இலங்கையின் மிக நீளமானதும், அதிக வருமானத்தை பெற்று கொடுத்ததுமான வடக்கிற்கான ரயில் பாதை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கு, தெற்கு உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் புனரமைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் ஓமந்தை வரை ரயில் பாதை புனரமைக்கப்பட்டதுடன் 2010ம் ஆண்டு தாண்டிக்குளம் வரை இவ் ரயில் சேவை நீடிக்கப்பட்டது. 2013 செப்டெம்பர் 14ம் திகதி ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சி வரைக்கான யாழ்தேவி ரயில் செவை ஆரம்பிக்கப்பட்டது. இன்று முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான யாழ்தேவி ரயில் சேவை வடக்கு தெற்கு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி பளை நோக்கி பயணமானது.

இதனை தொடர்ந்து பளை ரயில்வே நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 7ம் திகதி முதல் தினமும் 4 சேவைகள் இடம்பெறவுள்ளன. அமைச்சர் குமார வெல்கம, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்தனர். பளை ரயில் நிலையத்தில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இவர்களை வரவேற்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire