jeudi 6 mars 2014

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிலை

ஏப்ரல் 24ல் இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டின் அரசியலில் ஈழத்தமிழர் விவகாரமும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் இந்திய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைகாணப்படுகிறது. 

காங்கிரசின் முன்னால் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துள்ளது. இதேபோன்று தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு மிகப் பெரிய திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், 1988ல் தனியாகப் போட்டியிட்டது போன்று தற்போது இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது இந்தியாவை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இந்திய காங்கிரஸ் கட்சியே தலைமையேற்று நடாத்துகிறது. இந்நிலையில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குடன் தொடர்புபட்ட ஏழு குற்றவாளிகளையும் விடுவிப்பதற்கான அனுமதி வழங்காமை போன்றன காங்கிரசிற்கு இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆயுட் கைதிகளான முருகன், சாந்தன் ,பேரரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா கோரிக்கை விடுத்த போது, இதன் எதிர்க்கட்சியான தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஏகமனதாக வரவேற்றன. 

தி.மு.க மற்றும் ஏனைய தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் செவ்வாயன்று மியான்மாரில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியமை காங்கிரஸ் கட்சியின் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சிறிலங்காவுக்கு எதிராக தற்போது இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்திய ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகக் கலந்துரையாடினர். 

இந்தச் சந்திப்பானது மியான்மாரில் இடம்பெற்ற பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றது என்பதை நம்பவைப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே அமெரிக்கா தலைமையில் பேரவையில் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

2004லிருந்து காங்கிரசின் கூட்டணியாக இருந்த தி.மு.க கடந்த மார்ச்சில் ஈழத் தமிழர் விவகாரத்தை முன்னுரிமைப்படுத்தி இதிலிருந்து பிரிந்தது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire