mardi 11 mars 2014

அதிகாரம் ஐ.நாவுக்கு இல்லை – மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
கம்பகாவில்  நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய அவர், 
“எந்த அனைத்துலக சவாலையும் எதிர்கொள்ளும் வலிமை சிறிலங்காவுக்கு உள்ளது. 
ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அவர்களின் அடிவருடிகளுக்கோ நாம் அடிபணியமாட்டோம்.
இந்த நாட்டின் மக்களுக்கு மட்டுமே, அரசாங்கத்தை மாற்றுகின்ற அதிகாரம் உள்ளது. 
மக்களின் ஆதரவு இல்லாமல், ஐ.நாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும். அரசாங்கத்தை அகற்ற முடியாது. 
மக்களின் முன்பாக எமது தலைகளை குனிந்து கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். 
ஆனால், ஏகாதிபத்தியவாதிகளின் முன்பாகவோ, கடின முயற்சியின் மூலம் பெறப்பட்ட அமைதியையும். சுதந்திரத்தையும் காட்டிக் கொடுத்த- அவர்களின் அடிவருடிகள் முன்பாகவோ நாம் தலைவணங்கமாட்டோம். 
மக்களின் தீர்ப்பின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. 
நாட்டில் உள்ள எல்லா மக்களும் பயனடையத் தக்கவகையில், பாரிய அபிவிருத்திப் பணிகளை முறைப்படியாக மேற்கொண்டுள்ளோம். 
அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். 
30 ஆண்டுகாலப் போரை முடிவுக்கு வந்ததன் விளைவாக, நாடு ஐந்து ஆண்டுகளுக்குள் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. 
ஆனால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜெனிவாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாம் ஜெனிவாவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. 
நாம் மனிதஉரிமைகளை மீறியதாக அவர்கள் கூறுகிறார்கள். 
மக்களை உயிர் வாழ அனுமதித்ததை விட பெரிய மனிதஉரிமை என்ன இருக்கிறது? 
வாழும் உரிமை தான் முக்கியமான மனிதஉரிமை. 
மக்கள் தான் சரியானது எது. தவறானது எது என்பதை தீர்மானிக்க முடியுமே தவிர, ஐ.நா மனிதஉரிமை ஆணையம் அல்ல. 
முடிவெடுக்கும் அதிகாரம் உங்களின் கைகளில் தான் உள்ளது. 
நீங்கள் தவறு என்று கூறினால், அதற்கு நாம் தலைவணங்கத் தயார்.  மக்களின் முன் தலைவணங்க நாம் தயாராகவே இருக்கிறோம். 
ஆனால், ஏகாதிபத்தியவாதிகளிடமோ, அவர்களின் அடிவருடிகளிடமோ தலைவணங்கமாட்டோம் என்பதை தெளிவாக கூறுகிறோம். 
சிறிலங்காவில் போர்குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்றால், அதனை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தீர்மானிக்க முடியாது. 
விசாரணை தேவையென்றால் அதனைத் தீர்மானிக்க வேண்டியது இங்குள்ள மக்கள் தான். 
போர் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோரினால், அதற்கு தலைவணங்கத் தயார். 
ஆனால், அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire