vendredi 21 mars 2014

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை-ஒபாமா

natoஉக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்காக அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று "நேட்டோ' நாடுகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து நேட்டோ பொதுச்செயலர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்மியூசன் புதன்கிழமை கூறுகையில், ""ரஷியாவுடன் எங்கள் நட்பு நாடுகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோது, அந்நாடு அடிப்படைக் கோட்பாடுகளை அப்பட்டமாக மீறியுள்ளதை அறிந்தேன். எனவே, தனது நடவடிக்கைகளுக்காக ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். போலந்து மற்றும் ருமேனியா வான் எல்லைகளிலும் அவர்களது விமானங்கள் அத்துமீறுகின்றன. ரஷியா மீது ராஜீய மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்'' என்றார்.

ராணுவ நடவடிக்கை இல்லை-ஒபாமா: இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், ""உக்ரைன் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம். இப்பிரச்னையில், எங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து ராஜீய ரீதியான வழியையே கடைபிடிப்போம். உக்ரைனின் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஹோர் டென்யுக்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ""கிரீமியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள உக்ரைனுக்கு முழு ஆதரவளிப்போம். உயிரிழந்த உக்ரைன் ராணுவ வீரருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். உக்ரைனின் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்'' என்று கூறியதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்.

உறவுகள் துண்டிப்பு: கிரீமியாவை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டதுடன் உக்ரைனின் கடற்படைத் தளத்தையும் ரஷியா அபகரித்துக் கொண்டதையடுத்து ரஷியர்களுக்கு விசா வழங்குவது உள்பட அந்த நாட்டுடனான முக்கிய உறவுகளை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

கிரிமியா விவகாரம்: உக்ரைன் கடற்படை தளபதி விடுதலை
கிரிமியாவில் ரஷிய ஆதரவாளர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட உக்ரைன் கடற்படை தளபதி நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவின் அனுதாபியாக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி தலைநகர் கீவ்வில் இடைவிடாது பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்த கிளர்ச்சி தீவிரமானதால் அவர் திடீரென்று தலைமறைவாக, போராட்டக் குழுவினர் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இதனால் உக்ரைனில் தன்னாட்சி பகுதியான கிரிமியா பிரதேசத்தை ரஷிய ராணுவம் நுழைந்து கைப்பற்றியது. அங்கு ரஷிய மொழி பேசுவோர் அதிகம் வசிப்பதால் அப்பகுதியில் வசிப்போர் ரஷியா பக்கம் சாய்ந்தனர். இதனால் கிரிமியாவில் இருக்கும் ரஷிய ஆதரவு தலைவர்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைய முடிவு செய்தனர்.

அதற்கான வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதிபர் புதின் கையெழுத்திட்டார். ஆகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணையப்போகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் கிரிமியாவில் உள்ள உக்ரைன் கடற்படை தலைமையகத்தை ரஷிய ஆதரவாளர்களும், முகமூடி அணிந்த ராணுவ வீரர்களும் கைப்பற்றி ரஷிய கொடியை ஏற்றினர். சண்டை எதுவுமின்றி இது அரங்கேறியது.

அங்கிருந்த உக்ரைன் கடற்படை தளபதி அட்மிரல் செர்ய் ஹைதுக் மற்றும் வீரர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டனர். இவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்டு ரஷிய ராணுவ மந்திரி செர்கெல் ஷொயிகு நேற்று அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில், ‘கைது செய்து வைத்திருக்கும் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து அங்கிருந்து இவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியுங்கள்’ என குறிப்பிட்டார். அதன்படி கடற்படை தளபதி மற்றும் உக்ரைன் வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

கிரிமியா இணைப்பு தொடர்பான உடன்பாட்டில் அதிபர் புதின் கையெழுத்து போட்டு 2 நாள் ஆனாலும் முறைப்படியான நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைய இன்னும் ஓரிரு தினம் ஆகலாம் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெல் லாவ்ரோவ் நேற்று அறிவித்தார்.

கிரிமியா இணைப்பு குறித்த தீர்மானம் ரஷிய பாராளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேறியது. அடுத்து மேல்-சபையில் இன்று நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகே இணைப்பு முறைப்படியாக அமலுக்கு வரும் என தெரிகிறது. இதன் விளைவாக ரஷியாவுடன் உறவுகளை துண்டிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire