mardi 21 mai 2013

விலை கொடுத்து விடுதலை வாங்க முடியாது. தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி ஈழத்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்ய வேண்டாம் ;ஈழப் பித்தன்.

18-05-2013 சனிக்கிழமை கடலூரில் சிறப்பான ஓர் கூட்டத்தை நடத்தி ஈழத் தமிழ் இனத்தை மீழ முடியாத சிக்கலுக்குள் அமுக்கியுள்ளார் செந்தமிழன் சீமான். தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்லி அவர்களை ஏமாற்றிப் படம் எடுத்து அதில் சம்பாதிப்பதை விடவும் அதே கதையை புலிகளுக்காக மேடையில் பேசினால் கோடிகளைச் சுருட்டலாம் என்று மிகவும் கால தாமதமாக ஈழத்துப் படகில் ஏறிய சீமான் தனது லட்சியத்தில் பாதியை எட்டிவிட்டார். மீதி இனி முதலமைச்சர் ஆவதுதான் பாக்கி!
ஓர் தொலைக்காட்சி நேர்க்காணலில் சூடேறிய சீமான், ' நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்குதானே கட்சியை ஆரம்பித்தீர்கள்?' என்ற கேள்விக்கு, ஆம் ஆட்;சியைப் பிடிப்பதற்குதான் கட்சியை ஆரம்பித்தேன் என்றார்.
தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் பயணம் செய்யும் பாதை ஈழத் தமிழர்களுடைய தோள்களாக உள்ளன. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைகளில் பல ஆயிரம் கோடிகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்ட சீமான் ஈழம் பற்றி அவர்களுக்கே பாடம் நடத்தப் புறப்பட்டார். கனடா போன்ற நாடுகளில் இவரது உரையை, வாடகைக்கு மண்டபம் எடுத்து சி.டி.யில் திரையிட்டு கேட்டு ரசித்து மகிழ்ந்தனர் விவரம் தெரியாத வசதியானவர்கள்.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை ஓரம்கட்டி வாய்வீச்சில் வல்லவராகிவிட்டார் சீமான்! தமிழ் நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து பல கோடிகளைச் சுருட்டியவர் இவர் மட்டுமே!
எங்காவது ஓர் மூலையில் மேடை அமைத்து முழங்கி விட்டு, அதை அப்படியே கனடா, நோர்வேக்கு அனுப்பி விடுவார். அங்கே இருப்பவர்கள் 'ஐயோ' என்று டாலர்களில் அனுப்பி வைத்தவர்கள் பல பேர்!
2013ல் எதை வைத்து கதை பேசுவது என்று தெரியாமல் 'தந்தி' தொலைக்காட்சிக்கு சிறப்பு நிருபராக சிறிது நாள் நடித்தார். இயக்கமும் நடிப்பும் அவரது தொழில் என்பதை வெளிநாடு வாழ் தமிழர்கள் மறந்துவிட்டனர் சில காலமாக!
ஏதாவது ஒர் புரட்சி பண்ணினால்தான் தனது போட்டியாளர்களை வீழ்த்தி முதலமைச்சர் நாற்காலி வரை செல்லலாம் என்று ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி தலைவரான, 'ஜாசின் மாலிக்' கை அழைத்து வந்து விட்டார் கடலூருக்கு. ஈழத் தமிழரது விடுதலைக்கு அவர் ஆதரவு வழங்குவார் என்று கூறினார் கூட்டத்தில்.
சீமானுக்குப் பெருமையோ பெருமை! மாலிக் ஆதரவு தருவதாகப் பேசிவிட்டார். ஆதலால் நோர்வே, கனாடாவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு கோடியாவது இந்த மாதத்துக்குள் வந்து சேர்ந்து விடும் என்று பொங்கி வழிந்து, செல்வச் செழிழப்பு தெரிந்தது அவரது முகத்தில்.
ஈழப் பிரச்சினையில் காஸ்மீர் பிரச்சினையைத் தொடர்பு படுத்தக் கூடாது என்று ஆரம்ப காலம் தொட்டே கவனமாக இருந்தனர் ஈழத் தமிழர்கள். வித்தியாசமாகப் படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்கள் போன்று, பின்விளைவு தெரியாமல் ஈழத்துப் பிரச்சினையுடன் காஸ்மீர் பிரச்சினையையும் கோர்த்துவிட்டார் சைமன்!
இந்தியா ஈழப்பிரச்சினையில் தயக்கம் காட்டியவற்றில் காஸ்மீர் பிரச்சினையும் ஒன்றாக இருந்தது. தனது புகழுக்காகவும் பணத்துக்காகவும் ஜாசீன் மாலிக்கை இழுத்து வந்து ஈழப்பிரச்சினையில முடிச்சுப் போட்டு இந்திய அரசை தமிழரிடமிருந்து தூர விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சைமன்.
விழுந்து விழுந்து விடுதலைக்காக உழைப்பது போன்று காண்பித்துப பணம் தேடும் சீமான் விபரீதத்தைத் தொடுத்துவிட்டுள்ளார் ஈழத் தமிழர்களுடன்.
வெளிநாடு வாழ் பைனான்சியர்களுக்கு (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) இதன் விபரீதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஈழப்பிரச்சினையில் உண்மையான வரலாறே இவர்களில் பலருக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் காஸ்மீர் பிரச்சினையின் பின்னணியும் ஈழத் தமிழ் இனத்தின் பின்னணியும் எப்படித் தெரிந்திருக்கப் போகிறது!
பணத்தை அள்ளி வீசினால் தமிழ் நாட்டில் பணி செய்ய பலர் காத்திருக்கின்றனர் என்று கண்டு பிடித்துள்ளனர் வெளிநாட்டு ஈழத் தமிழர்கள். நன்றாகக் குரைக்கிறவருக்கு அதிக பணம் அனுப்பிவைக்கின்றனர். குறைப்பதுடன் நிற்காமல் காஸ்மீர் காலைக் கடித்து இழுத்து வந்து விட்டார் சீமான்.
பாதிப்பு சீமானுக்குக் கிடையாது மாறாக ஈழத் தமிழர்களுக்குத்தான்! நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் ஜாசின் மாலிக்கை அழைத்து வந்து, தமிழ் நாட்டைத் துண்டாடுவேன் என்று கூறியிருந்தால் துணிந்த தலைவன்தான் என்று போற்றலாம். அவரோ ஈழத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி இழுத்து வந்து சந்தேகத்தையும் விளைவுகளையும் ஈழத் தமிழர் தலையில் கட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் ஈழவிடுதலை விரும்பிகள் தங்களது பணத்தைக் கொண்டு தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கணிப்பது தவறானதாகும். இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்று யாராவது சொன்னால் அது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிகள், திட்டங்கள் வேறு உள்ளன. எதிர்ப்பை வளர்த்து, சந்தேகங்களை வளர்த்து, உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, வேறு இனப்பிரச்சினையை இழுத்து வந்து எங்கள் தலையில் கட்டி போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லாமல் தடைகள் தாண்டுவதையே தலையெழுத்தாக மாறிவிடக் கூடாது.
கடந்த காலங்களில் இதனைத்தான் புலிகளின் ஆதரவாளர்கள் செய்தனர். நட்புக் கொள்ள வேண்டியவர்களைப் பகைப்பதும், பகைக்க வேண்டியவர்களுடன் நட்புக் கொள்வதும் பின்னர் அதற்கு ராஜதந்திரம் என்று பொய் விளக்கம் கொடுப்பதும் வரலாறாக இருந்து வந்தது.
தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி ஈழத்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்ய வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். விலை கொடுத்து விடுதலை வாங்க முடியாது. பணத்துக்காக நடிப்பவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அதிலும் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பணத்தை மையமாகக் கொண்டவை. வெளிநாட்டு ஈழத் தமிழரது பணம் சிலர் வளமுடன் வாழ பயன்படுமே தவிர விடுதலைக்கு இதுவரையில் எந்தப் பயனையும் தந்தது கிடையாது.
தெரிந்து கொண்டால், விளங்கிக் கொண்டால் ஈழத் தமிழருக்கு நன்மை கிட்டும். கூலி கொடுத்து விடுதலைக்கு ஆள்பிடிக்க வேண்டாம். கூலிக்கேற்ற வேலை என்று நினைத்து வினையை விதைத்துக்கொண்டிருக்கிறார் அந்தக் கூலியாள்.
நன்றியுடன்,
ஈழப் பித்தன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire