jeudi 30 mai 2013

மூன்று சிறுமிகளின் கொலை புதிய திருப்பம்... பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி நழுவுகிறது பிரதேச செயலகம். போலி வேடம் போடும் அரச அதிகாரிகள்.

வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த இரு வாராங்களுக்கு முன் (16.05.2013) ஒரு தாய் தன் மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை (4 வயது, 3வயது, 1வயது) கிணற்றில் வீசி எறிந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்துக்கு சில அரசியல்வாதிகளும், மக்களும் திரண்டனர். அந்த அளவு இச் செய்தி வவுனியாவில் பெரும் சூடு பிடித்தது. அவ்விடத்துக்கு சிறி ரெலோ கட்சியின் தலைவர் திரு.உதயராசா என்ற அரசியல்வாதி விரைந்து சென்றுள்ளார். ஊர் மக்கள் பலர் அவ்விடத்தில் கூடி வேடிக்கை பார்ப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். ஆனால் பிரச்சினை நடப்பதற்கு முன் எவ்வித செயற்பாடுகளையும் இவர்கள் செய்ய முன்வரவில்லை.

இது தொடர்பான மனதை உலுக்கும் புகைப்படங்கள் பல இணைய தளங்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செய்திகளில் பிரதேச செயலகம் மற்றும் அதனுள் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள், சிறுவர் அமைப்புக்கள் உட்பட சிறுவர் காப்பகங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 27.05.2013 திங்கட்கிழமை வீரகேசரி பத்திரிகையில் பிரதேச செயலாளரால் இச் செய்திக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும், 5 வருடங்களாக குறித்த பெண்ணான சந்திரகுமாரி மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு தாங்கள் உதவ முன்வந்திருந்ததாகவும் ஆனால் காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகங்கள் உண்மையை அறியாது தம் மீதும், தம் அலுவலகம் மீதும், அலுவலகர்கள் மீதும் குற்றஞ்சாட்டியதாகவும் கூறியுள்ளார். 

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான உண்மைகள் பலவற்றை நாம் இங்கு முன்வைக்கி்ன்றேன். அவற்றை முன் வைப்பதனூடாக இச் சம்பவத்தின் உண்மைத் தன்மைகளையும், சமூக நிறுவனங்களின் போலித்தனமான அக்கறைகளையும் வெளிக் கொணரலாம் என்று நினைக்கின்றேன்.

பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரம் குறிப்பிட்ட செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் காணப்படவில்லை. உண்மைத் தன்மைகளை மறைத்து தம் மீதுள்ள குற்றத்தை திசை திருப்ப முனைகின்றார். நடந்த சம்பவங்கள் அவருடைய அலுவலகத்திலிருந்து எம்மால் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணாண சந்திரகுமாரி சம்பவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் வவுனியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவர் காப்பகங்களுக்கு சென்று தம் பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு கேட்டிருக்கின்றார். ஆனால் அந் நிறுவனங்கள் பெற்றோர் உள்ள குழந்தைகளை தாம் பொறுப்பேற்க முடியாது என்று தட்டிக் கழித்திருக்கின்றனர். அவ்வேளையிலும் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஓர் காப்பகத்தில் இரண்டு மணி நேரமாக தன் பிள்ளைகளின் மறு வாழ்வுக்காக போராடியிருக்கின்றார். அனால் அங்கும் அவர்களுடைய சட்டங்கள் இப் பெண்ணுக்கு எதிராகவே காணப்பட்டதால் அங்கும் ஏமாற்றத்துடனேயே திரும்பியதாக அவரை மனிதாபிமான முறையில் இலவசமாக அங்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்பு அவ் ஆட்டோ உரிமையாளர் கூறிய அறிவுறுத்தலின் படி அப் பெண் கிராம சேவையாளரிடம் சென்று பிரச்சினையை கூறியுள்ளார். அவர் பிரதேச செயலகத்தக்கு செல்லுமாறும், சிறுவர் பிரிவு உத்தியோகத்தரிடம் செல்லுமாறும் அறிவுறுத்தியிருக்கின்றார். அடுத்த நாளே அப் பெண் பிரதேச செயலகத்துக்கு இறுதி முயற்சியாக விரைந்திருக்கின்றார். அங்கு சிறுவர் பிரிவு பொறுப்பாளர் திரு.கனடி, பெண்கள் பிரிவு பொறுப்பாளர் திருமதி ஜெயசித்திரா ஆகியோர் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இவரையும், இவருடைய குழந்தைகளையும் காட்டி நகைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரத்திடம் நேரடியாக அப் பெண் பிரச்சினையை முன்வைத்த போது அவரை பேசியிருக்கின்றார். அவ் வேளை அப் பெண் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தாம் தற்கொலை செய்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் அதற்கு அங்கிருந்த பெரு மதிப்பு மிக்க ஊழியர்கள் சிறிதும் சிந்திக்காமல் முதலில் அதைச் செய் என்று கேலி செய்திருக்கின்றனர். இச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதாக பிரதேச செயலக அலுவலர் ஒருவர் தெரிவித்து கவலைப்பட்டார்.

இத் தொடர் தோல்விகளாலும், தொடர் கேவலங்களாலும் பாதிக்கப்பட்ட அப் பெண் தற்கொலை மற்றும் கொலை முயற்சிக்கு தூண்டப்பட்டிருக்கின்றார் என்பது அறியப்படுகின்றது. கொலை செய்தவரை விட அக் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவரே பெருங்குற்றவாளி என்று சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் இங்கு முதற் குற்றவாளி யார்?

இங்கு எமக்கு கிடைக்கப்பட்ட செய்திகளின் படியும், பிரதேச செயலாளர் குறிப்பிட்ட செய்திகளின் ஊடாகவும் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதை இங்கு முன்வைக்கின்றோம்.

5 வருட காலமாக சந்திரகுமாரி என்ற அப் பெண் மன நோய் பாதிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அவ்வாறானால் அப் பெண் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பெறெடுத்தாரா?

அந் நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்திருந்தால் அவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன் செக்ஸ் உணர்வை தீர்த்திருக்கின்றாரா? அப்படியானால் அவருக்கு என்ன தண்டனை?

இறந்த பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு வயது 4. அப்படியானால் அப்பிள்ளை பிறக்கும் போது சந்திரகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது பிரதெச செயலாளரின் கருத்து. இதை வைத்தியர்கள் கணவரிடம் அறிவிக்கவில்லையா? என்றால் இதில் ஆழ்ந்திருக்கும் மர்மம் என்ன?

தன் பிள்ளைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டு இருந்த போது ஒரு வாரமாக தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக போராடிய நிலையை பைத்தியம் என்று கொள்ளலாமா?

ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் காப்பகங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சென்று இத்தகைய நிலையில் தன்னந்தனியாக போராட முடியுமா?

குழந்தையை கிணற்றில் வீசி இறந்த போது விளையாட்டுப் பொருட்கள் சில கிணற்றில் கிடந்தன. முதலில் கிணற்றில் அவை வீசப்பட்டு பிள்ளைகளின் பதட்டத்தை போக்கியிருக்க முனைந்திருக்கலாம். இது ஒரு பைத்தியம் செய்யக்கூடிய வேலையா?

இவர் உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் பிள்ளைகளின் நன்மை கருதி உடனடியாக பிள்ளைகளை பொறுப்பேற்க ஏன் குறித்த நிறுவனங்கள் முன்வரவில்லை? கூடியிருந்த அயல் மக்கள் இப் பெண்ணின் நிலை மோசம் என்று கருதியிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்பர். இவற்றிலிருந்து உண்மையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதை அறியலாம். ஆனால் அவர் உளவியல் ரீதியாக தற்போது பாதிக்கப்பட்டிருப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைவருமே காரணகர்த்தாக்கள் ஆவர்.

இவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று எங்கு தாம் குற்றவாளி இல்லை என்று கூறினாலும் சமூகம் ஏற்கப்போவது இல்லை.

இவற்றை ஆராய்கின்ற போது பிரதேச செயலாளரும், உதவி பிரதேச செயலாளரும், மற்றும் பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகளும் பாரிய குற்றம் நிகழ்வதற்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது தம் பதவியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகின்றனர்.

எனவே உயர் அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், தான்தோன்றித்தனமாக தம் வேலைத் தளங்களை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட அசர அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம்.

இது போன்ற ஒரு கேவலமான நிலை இனி இவ் இலங்கைத் திருநாட்டில் நடைபெறாமல் இருக்க வேண்டாம் என்றால் இத்தகைய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் வெறும் கண்துடைப்புக்காக இருக்கின்றனர். குற்றம் செய்ததாக காட்டப்பட்டுள்ள பெண்ணின் கணவர் சிறி ரெலோவுடன் நெருங்கிய உறவில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவ்விடத்துக்கு அக் கட்சியின் அமைப்பாளர் சென்றதன் மர்மம் என்ன? இதையும் அரசு கண்டறிய வேண்டும்.

5 பிள்ளைகளை பெற்றெடுத்தவருக்கு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் இன்னொரு திருமணம். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?


இத் தற்கொலை முயற்சியின் பின்னாலும், கொலையின் பின்னாலும் பெரும் மர்மம் ஒழிந்திருப்பது உண்மை. இவ் வழக்கில் பொலிசார் நீதியாக நடந்து கொண்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

இச்சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரதேச செயலாளர் கிரவல் குவாரி, கருங்கல் குவாரி என்று எடுத்து பல சொத்துக்களை சேர்த்துள்ளார் மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆராய வேண்டும். அரச கேள்விகள் இவர்கள் ஊடாக வெளியே விற்கப்படுவதாகவும் தெரிவுக்கப்படுகின்றது. இது தொடர்பான கட்டுரையை ஆதாரங்களுடன் வரும் வாரம் வெளியிடுகிறேன்.

---சித்தன்---



Aucun commentaire:

Enregistrer un commentaire