mardi 14 mai 2013

6000 அறைகள் முன்கூட்டியே பதிவு பொதுநலவாய உச்சி மாநாடு 2013 உறுப்புரிமை நாடுகளுக்கு


Commonwealth6000 அறைகள் முன்கூட்டியே பதிவு ஹம்பாந்தோட்டை, தம்புள்ளையிலும் பேரவைகள் இலங்கையில் நடைபெறும் பொது நலவாய உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் அடுத்த வாரமளவில் அனைத்து உறுப்புரிமை நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்து வரும் நிலையில் அழைப்பிதழ்கள் வடிவமைக்கும் பணி பூர்த்தியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் சில நாடுகள் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதிலும் தாம் அதனை பொருட்படுத்தாது அனைத்து உறுப்புரிமை நாடுகளுக்கும் மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளோம் எனக் கூறிய அமைச்சின் செயலாளர் அனைத்து நாட்டின் பிரதிநிதிகளும் உச்சி மாநாட்டில் கலந்து சிறப்பிப்பரென்ற நம்பிக்கையினை அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.இதேவேளை பொதுநலவாய உச்சி மாநாட்டினை முன்னிட்டு இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவதற்கென கொழும்பு மற்றும் அதன் சுற்றியல் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் அறைகள் வரை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ள உச்சி மாநாட்டினையொத்ததாக ஹம்பாந்தோட்டையில் இளைஞர் பேரவை மற்றும் தம்புள்ளையில் மக்கள் பேரவை ஆகியனவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இதற்கென ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு குழுக்கள் சகல மட்டத்திலும் தேவையான பணிகளை திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வேண்டுகோளுக்கிணங்க பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறைந்த செலவிலேயே திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் கூடுமானவரை உள்நாட்டு தயாரிப்புக்களே பயன்படுத்தப்படவுள்ளதுடன் மிகவும் அவசியமானவையென கருதப்படுபவை மாத்திரமே இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire