lundi 27 mai 2013

செட்டிகுளம் மக்கள் கோரிக்கை ;தமது செந்த இடங்களில் குடியேற்றுமாறு

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் கங்கங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒற்றாக்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தம்மை மீள்குடியேற்றுவற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

1990ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இடம்பெயர்ந்த உறவினர்களின் வீடுகளில் வசித்து வரும் இக் கிராம மக்கள் இதுவரை தாம் மீள்குடியேற்றப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பெற்றோர் தொழில் நிமிர்த்தம் இப்பகுதியியல் குடியேறியிருந்தனர். அதன் பின்னர் அவர்கள் தமது காணிகளுக்கு ஜெயபூமி உறுதியை பெற்று தமது வாழ்விடங்களை வளமாக்கியிருந்ததுடன் விவசாயத்தினையும் மேற்கொண்டு வந்தனர். அப்போது இங்கு 54 குடும்பங்களை சேர்ந்த 200 அதிகமானவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

அதன் பின்னர் இனக்கலவரம் ஆரம்பமாகியபோது 1983ஆம் ஆண்டு இக் கிராமத்தில் இருந்து வெளியேறிய நாம் 1985ஆம் ஆண்டு மீண்டும் குடியேறியிருந்தோம். அதன் பின்னர் 1990ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடைந்தபோது எமது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டமையினால் நாம் மன்னார் சென்று இந்தியாவிற்கு சென்று மீண்டும் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு வந்த போது எமது கிராமத்தில் நாம் மீள்குடியேற முடியாத நிலை காணப்பட்டமையினால்; செட்டிகுளத்தில் உள்ள எமது உறவினர் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றோம் என தெரிவித்தனர்.

இதேவேளை எமது கிராமத்தில் 2000ஆம் ஆண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையினால் தொடர்ச்சியாக நாம் எமது கிராமத்திற்கு செல்ல முடியாதவர்களாக்கப்பட்டு உறவினர் நண்பர்களது வீடுகளிலும் நீண்ட காலம் விசிக்க முடியாதவர்களாக அல்லல்பட்டு தற்போது வாடகை வீடுகளிலும் தனியார்களின் காணிகளில் கொட்டில் அமைத்தும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந் நிலையில் எமது கிராமத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு இராணுவத்தினர் வெளியேறி எம்மை குடியேற முடியும் என தெரிவித்திருந்த போதிலும் அப் பகுதியில் இராணுவ காலவரண்கள், இராணுவ மண் அரண்கள் அகற்றப்படாமல் உள்ளது. அத்துடன் மிதி வெடிகள் காணப்படலாம் என்ற அச்சமான நிலை எமக்குள்ளது.

இவ்வாறன சூழலில் எமது கிராமத்தை நாமாகவே துப்பரவு செய்து மீள் குடியேறுமாறு பணிக்கின்றனர். உயிராபத்து ஏற்படக்கூடிய இவ்வாறான அபாயகரத்திற்கு மத்தியிலும் போதுமான வருமானமின்றி வாழ்க்கை நடத்தும் எம்மிடம் துப்பரவு செய்து மீள்குடியேறுமாறு கூறுவது மனச்சாட்சிக்கு அப்பாற் பட்டதகவே நாம் எண்ணுகின்றோம்.

இதற்குமப்பால் 44 குடும்பங்கள் நாம் தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள பதிவுகளை நிறுத்தி மீள்குடியேறுவதற்காக பதிவு செய்துள்ளமையினால் எவ்வித உதவி திட்டங்களையும் பெற முடியாதவர்களாக உள்ளதுடன் எமது கிராமத்திற்கான குடும்ப அட்டையை கூட கிராம சேவகரிடம் இருந்து பெற முடியாகவர்களாக ஆளாக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறான நிலைமைகள் குறித்து நாம் செட்டிகுளம் பிரதேச செயலாளாரிடம் முறையிட்டுள்ள போதிலும் எவ்வித பலனும் இன்றி அல்லல்படுபவர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.

எனவே யுத்தம் முடிவுற்று 4 வருடம் கடந்துள்ள நிலையில் பல கிராமங்கிளலும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் எமது கிராமம் மட்டும் மீள்குடியேற்றம் செய்யப்படாது உள்ளது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளரும் வவுனியா அரசாங்க அதிபரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire