mercredi 12 juin 2013

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 13வது திருத்தச் சட்டமூலத்திற்கு மரணச் சடங்கு ;ஸ்ரீதரன்-சுகு

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமூலத்திற்கு மரணச் சடங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கல் ஆரம்பித்த நாளிலிருந்து அதனை கால்தடம் போட்டு வீழ்த்துவதற்கு நடத்தப்பட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவொரு இழிவான வரலாறு. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகார பரலாக்கல் கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.பி.ஆர்.எல். இன் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அன்றைய ஐ.தே.க ஆட்சியாளர்கள் குறிப்பாக பிரேமதாசா- அரசு புலிகள் - ஜே.வி.பி எல்லோருடைய எதிர்ப்புக்கும் அப்பால் ஆட்சி கட்டமைப்பை நிர்மாணிக்க வேண்டியிருந்தது.

அதிகாரப்பரலாக்கலுக்கு எதிராக சிங்கள தரப்பாலும், தமிழ் தரப்பாலும் நடத்தப்பட்ட கூத்துக்கள் புத்தி- தூரதிருஷ்டியின்மை இங்கு பதிவு செய்யப்படல் வேண்டும். மரணங்கள், சேதங்கள் ,வன்மமும் ,குரோதமும் நிறைந்த ஆவேச கூச்சல்களுக்கு நடுவில்தான் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தை தாபிக்க வேண்டியிருந்தது. ஆனால் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்களை அனுமதிப்பதற்கு பிரேமதாசா அரசு மனப்படவில்லை.

13வது திருத்தத்தில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரத்திற்காகவும் போராட வேண்டியிருந்தது. இந்திய அமைதிப்படை பிரசன்னமான நிலையிலேயே பெரும் சவால்கள் பிரச்சனைகள் மத்தியில் மாகாண அரசை நகர்த்த வேண்டியிருந்தது. விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஒவ்வொரு துறைகளிலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இறுதியாக இந்திய அமைதிப்படை மாகாண பொலிசுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கிய பின்புதான் அதனை அரைகுறையாகவேனும் ஒப்புக்கொள்ள பிரேமதாசா அரசு முன்வந்தது. அதுவும் இந்தியாவில் உள்ளது போல் மாநிலங்களுக்கான தனியான காவல்துறை அல்ல.இலங்கையின் ஒரு உதவிபொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த பொலிஸ் செயற்பட்டது. அது பிரஜைகள் தொண்டர் படை என அழைக்கப்பட்டது. நிலம் ,நீர்ப்பாசனம் தொடர்பாக இழுபறிகள் நிலவின. வெலிஓயாவுடன் திருமலை, வவுனியா முல்லைத்தீவின் பகுதிகளை இணைக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில்தான் 19வது அம்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஒருவருடத்தில் இது செயற்படுத்தப்படாதவிடத்து சுதந்திர ஈழம் என்ற பிரகடனம் வரை சென்றது. இந்நிலை துரதிஷ்டவசமானது.

13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்களை உண்மையான அர்த்தத்தில் பகிர்ந்தளித்தால் பிரச்சினைகளே கிடையாது. ஆனால் அதை வெட்டி- குறுக்கி- சிதிலமாக்கும் விடயம்தான் எரிச்சலடைய வைக்கிறது. ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அழகு அங்கு சிறுபான்மை சமூகங்கள் நலிவுற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் பிரபாகரனும்- பிரேமதாசாவும் அண்ணன் தம்பி உறவு கொண்டாடி இந்திய அமைதிகாப்புப் படை வெளியேற வேண்டும் என்றார்கள். அதற்குப் பின் வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தாமல் 20 வருடங்கள் ஸ்தம்பிதமடைந்தது. எந்தப் பிரச்சினைகளை முன்வைத்து எந்த பிரதேசங்களை பிரதானப்படுத்தி மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டதோ அந்த மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் இல்லையென்றாகியது.

யுத்த காலத்திலும் சரி, யுத்தத்திற்கு பிந்திய காலத்திலும் சரி ஓய்வுபெற்ற அல்லது பதவியிலிருந்த படையதிகாரிகள் சிவில் நிர்வாகத்தின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் அதுதான் நிலை. கிழக்கில் இனப்பரம்பல் கடந்த 20 வருடங்களில் தீவிர மாற்றம் பெற்றது. நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க வடக்கும்- கிழக்கும் பிரிக்கப்பட்டுவிட்டது. தற்போது அதே பேரினவாத சக்திகள் 13வதுக்கு மரணச்சடங்கு நடத்த முயற்சிக்கின்றனர். அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான ஆவேசம் ,வடக்கு கிழக்கு மாகாண சபை கலைப்பு, பிரிப்பு ,தேர்தல் இல்லை என்பவற்றுடன் நிற்கவில்லை. பிரதம நீதியரசரை தூக்கியெறியும் அளவுக்கே 13வது வெறுப்பை ஊட்டியது.

மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசு கவர்;ந்து கொள்ள கிராம எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது இதனை சாத்தியமாக்குவதற்கு அனைத்து மாகாணங்களினதும் அனுமதியை பெறவேண்டும் என்ற தீர்ப்பே ஆட்சியாளர்களை சினங்கொள்ள வைத்தது. அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பை பலமிழக்க வைக்கும் நடவடிக்கையால் இலங்கையின் நீதித்துறை ஆட்டம் காணச் செய்யப்பட்டது. அதிகாரப் பரவலாக்கல் நிகழவேண்டிய பிரதான பிரதேசத்தில் சிவில் நிர்வாகத்துக்கு பதிலாக படைகளின் பிரசன்னமும் சிவில் விடயங்களில் படையினரின் செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தில் என்ன பலன் என்பதற்கு இதுதான் பதிலாக இருக்கிறது. இந்தப் பதில் மக்களை விரக்தியுவும், சினமுறவும் செய்யும். சமூகங்களை ஒன்றிணைக்க உதவாது. கடந்த 20 வருடங்களில் நிதி, சுகாதாரம், கல்வி ,போக்குவரத்து இதர துறைகளில் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு மிகையாகவே காணப்பட்டது. நிலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிகாரப்பரவலாக்கல் முறையொன்று இருக்கிறதென்ற பிரக்ஞையே இருக்கவில்லை.

தென்பகுதியில் சில மாகாணங்களில் இளம் மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரப்பரவலாக்கல் பற்றிய அக்கறைகள் இருந்தன. ஆனால் அவை பொதுவானவையாக இருக்கவில்லை. நாட்டில் கட்சிகளின் பலத்தை அளக்கும் சோதனைக்கூடங்களாகத்தான் அவை இருக்கின்றன. பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை. எனவே இயல்பாகவே அதுவொரு சுமையாக அமைந்தது. உண்மையில் தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களே அதிகாரப்பரவலாக்கல் தேவைப்பட்ட மக்களாகவும், அதை உணர்ந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.

இலங்கை ஒரு தீவாகவும் சிங்கள மக்கள் அதில் அதிக பெரும்பான்மையாக இருப்பதால் சிங்கள மக்கள் மத்தியில் அது பெரிதாக உணரப்படவில்லை. இன்று சிறுபான்மையின விரோதப் போக்குகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பல்லினங்களின் நாடாக உறுதிப்படுத்தப்படும் தேவை உருவாகியிருக்கிறது. 13வது திருத்தத்தின் கீழ் இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்ற ஏற்பாடு மாகாணங்களின் அதிகாரங்கள் தொடர்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் போது அனைத்து மாகாணங்களினதும் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்ற ஏற்பாடு பிரதானமாக சட்டம், ஒழுங்கு நில அதிகாரம் போன்றவற்றை இல்லாமல் செய்யப்படுவதற்கான ஏற்பாடு அவசர அவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது கடந்தவொரு அமைச்சரவை கூட்டத்தில் தீவிர கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஈ.பி.டி.பி, மற்றும் ஜனநாயக உணர்வுள்ள அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டார்கள். வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்துவதற்கு முன்னர் 13வது திருத்தத்தை வெறும் கோதாக்குவதற்கான முயற்சிகளை சகல உள்ளுர், சர்வதேச வழிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். 13வதன் முக்கியத்துவம் தமிழர்களுக்கோ அல்லது தமிழ் தலைமைகளுக்கோ விளங்காமல் போனது இன்று கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதும் அவ்வாறுதான்.

வடக்கு கிழக்கு மாகாணசபையை ஒற்றுமையாக இயக்க வாய்ப்புப் பெற்றிருந்தால் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு மாகாண அரசை ஸ்தாபிப்பதற்குரிய வசதிகளையும், அனுசரணைகளையும் கொண்டிருந்த நாம் காலகதியில் அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை நிலை நிறுத்தியிருப்போம் .இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் அது நன்மை பயப்பதாக அமைந்திருக்கும். ஆனால் இன்று கற்பனைக்கெட்டாத அளவு உயிர்களை பலி கொடுத்து பேரழிவுகளை சந்தித்து அறுத்துக் கொட்டப்பட்ட வடக்கு மாகாணசபைக்காக காத்திருக்கிறோம்.

போகமுடியாத கற்பனை இடத்துக்கு வழி சொல்பவர்களால் ,சுயநலமும்- பேரவாவும் -சமூக கரிசனை- பொறுப்புணர்வு எதுவுமற்ற -முட்டாள் பேர்வழிகளால் வந்தவினை இது. 13வதின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அதிகாரங்கள் மீளவும் பறிக்கப்படாத நிலையை அடைவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடல் வேண்டும். அதற்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களுடனும் ,அதிகாரப்பரவலாக்கலை ஆதரிக்கும் தெற்கின் ஜனநாயக இடதுசாரி

சக்திகளுடனும் கரம் கோர்க்க வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire