lundi 24 juin 2013

சிறிலங்கா அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும்;மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன்

இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா மாறுவதைத் தடுக்கவே, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாக இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 

வெலிங்டனில் சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“சிறிலங்காவில் 49 இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. 

எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம், சிறிலங்கா அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும். 

சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்தியா மறுப்புத் தெரிவித்தால், அந்த அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்புவார்கள். 

அது இந்தியாவின் எதிரிகளைப் பலப்படுத்துவதாக அமையும். 

இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. 

இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா உருவெடுப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். 

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது. 

தமிழர்களினதும் அவர்களிது சொத்துக்களினதும் பாதுகாப்பையும் இந்தியா கவனத்தில் கொள்கிறது.

இந்த விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்று மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

தமிழ்நாட்டில் சிறிலங்காப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனியிடம் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளோம். 

இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire