lundi 24 juin 2013

வெளிநாட்ட வர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதனை தடைசெய்வதற்கான ஜனாதிபதியின் புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்"

அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளையோ, அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளையோ, வெளிநாட்ட வர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க வெளிநாட்டவர்களுக்கு காணிகளை வழங்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்களை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்டமூலம் உருவாக்கப்பட்டதன் பின்னர் நீதிபதியினதும் அமைச்சரவையினதும் அனுமதியினை பெற்று அதனை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இத்துடன் நாட்டில் நிலவும் சமாதானம், மற்றும் துரித அபிவிருத்தியின் காரணமாக அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் காணிகளை பெற்றுக்கொள்ளும் அளவு அதிகரித்துள்ளது. அவற்றை விற்பனை செய்வது தொடர்பில் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுவதன் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பதற்கான கொள்கையில் மாற்றம் செய்வதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வது தொடர்பில் திறந்த கொள்கை ஒன்று வகுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்வைத்த அந்த யோசனைக்கு விரிவாக ஆராய்ந்து சட்டமூலத்தை உருவாக்க அதிகாரத்தை வழங்குவதற்கும், நீதிபதியினதும், அமைச்சரவையினதும் அனுமதியின் பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பரிசு, விற்பனை, மற்றும் நன்கொடை உள்ளிட்ட வகையில் எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனி சட்டத்தில் இடமில்லை எனவும், இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire