vendredi 21 juin 2013

குளித்த பின்னர், கால் இடுக்கு பகுதிகளில் பவுடர் போடும் பெண்களுக்கு புற்றுநோய் வரலாம்

பாஸ்டன் : குளித்த பின்னர், கால் இடுக்கு பகுதிகளில் பவுடர் போடும் பழக்கம் உள்ள பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீதம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவதும் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது. சிலர் கால் இடுக்கில் பிறப்புறுப்பு பகுதிகளில் பவுடரை அள்ளித் தெளித்து கொள்வார்கள். இதன் மூலம், நாள் முழுவதும் அரிப்பு இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதாக நினைத்து கொள்கின்றனர்.

ஆனால், இதுபோன்ற பழக்கம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், 8 ஆய்வு முடிவுகளை தொகுத்து உறுதியான முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 8,525 பெண்களையும், புற்றுநோய் பாதிப்பே இல்லாத 9,800 பெண்களிடம் பவுடர் பயன்பாடு குறித்து ஆராயப்பட்டது. இதில், குளித்த பின்னர் பிறப்பு உறுப்பு பகுதிகளில் பவுடர் போட்டுக் கொண்ட பெண்களில் 24 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், பிறப்பு உறுப்பு பகுதிகளில் போட்டுக் கொள்ளும்போது, பவுடர் துகள்கள் மெதுவாக உடல் முழுவதும் பரவுகிறது. பின்னர் அது மெதுவாக எரிச்சலை உருவாக்குகிறது. இதுவே புற்றுநோய் செல்கள் பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது.

கருப்பை புற்றுநோய் என்பது, அமைதியாக கொல்லும் ஒரு நோய். இதன் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய முடியாது. நோய் முற்றிய நிலையில்தான் இது தன் வேலையை காட்டும். இதனால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதும் கடினமாகிவிடுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவ்வப்போது சோதனை செய்து கொள்வதன் மூலமே கருப்பை புற்றுநோயை கண்டறிய முடியும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire