jeudi 13 juin 2013

இலங்கையில் பதிவு செய்யப்படாத NGO கள் நாட்டில் இயங்குவது தடை செய்யப்படும்!

இலங்கையில் செயற்படும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், இலங்கையில் அவை உரிய முறையில் பதிவு செய்யாவிட்டால் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன். நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல அறிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யாமல், நாட்டுக்குச் சேவையாற்றும் போர்வையில் அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொண்டு அரசைக் கவிழ்க்க இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் அபிவிருத்தி, நலன் என்ற போர்வையில் நாட்டுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சதிகளை மேற்கொண்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது எனவும், இந்த நிறுவனங்கள் தொடர்பாக இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், 2006 ம் வருடத்திலும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாராம் அதில் அடங்கியுள்ள நிபந்தனைகளை சகல அரசசார்பற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென லக்ஷ்மன் ஹலுகல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire