mardi 11 février 2014

சிறிலங்காவுக்கு எதிரான மற்றுமொரு நெருக்கடி

சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கோரும் தீர்மான வரைவொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்)சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் மற்றுமொரு தீர்மானம் ஒன்றினை அமெரிக்கா கொண்டுவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
348வது இலக்க தீர்மானமாக சிறிலங்காவில் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கு தேவையான, உள்நாட்டு மீள்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, நல்லிணக்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துதல் என்ற தலைப்புடன் இது முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் நாள் செனெட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மான வரைவில், அமெரிக்காவும், அனைத்துலக சமூகமும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் சிறிலங்காவில் போரின் போதும், அதற்குப் பின்னரும் இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் வெளியான அறிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கும், சுதந்திரமான பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் வட கரோலினா செனெட் உறுப்பினர் றிச்சர்ட் புர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மான வரைவுக்கு செனட் உறுப்பினர்கள் றொபேட் கசே, பற்றிக் லேஹி, செரோட் பிறவுண், பார்பரா பொக்சர், ஜோன் கோனின் ஆகியோர் இணை அனுசரணை வழங்கியுள்ளனர்.
இந்த தீர்மான வரைவு அமெரிக்க செனெட் சபையின் வெளிவிவகார குழுவின் கருத்தை அறிவதற்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மான வரைவின் உள்ளடக்கம்
சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களையும், அனைத்துலக உதவி நிறுவனங்களையும், மனிதஉரிமை அமைப்புகளையும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் - குறிப்பாக, அரசியல் கைதிகளும், போர்க் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் தடுப்புக்காவல் மையங்களிலும், எந்தக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக செயற்பட விடவேண்டும்.
வடக்கு கிழக்கில் தகவல் ஓட்டத்தை தடை செய்வது உள்ளிட்ட ஊடக கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும்படியும், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நீதியின் முன் நிறுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை, அமெரிக்கா காங்கிரஸ் கேட்டுக் கொள்கின்றது.
அமெரிக்காவின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல், சனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பொருளாதார நலன்கள், பாதுகாப்பு நலன்கள் தொடர்பான, பொருத்தமான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தும்படியும் இந்த தீர்மான வரைவு சிறிலங்கா அதிபரைக் கேட்டுக் கொள்கின்றது.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு ஆராய்ந்து இந்த தீர்மான வரைவு குறித்து விவாதம் நடத்துவதா, வாக்கெடுப்புக்கு விடுவதா என்பது குறித்து முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire