mercredi 17 juillet 2013

சாப்ரா : பீகாரில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 48 பேர் சிகிச்சை

சாப்ரா : பீகாரில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் தர்மசதி கந்தவான் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. சாதம், பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சில மாணவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மொத்தம் 11 மாணவர்கள் இறந்தனர். மேலும், 48 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். சாப்பாட்டில் விஷம் கலக்கப்பட்டதா என தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் பற்றி உயர்நிலை விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். சம்பவம் நடந்த கிராமம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் சாப்ரா மக்களவை தொகுதிக்குள் உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire