jeudi 11 juillet 2013

பொதுமக்களின் காணிகளிலிருந்து வெளியேற இராணுவம் தீர்மானம்: அச்செழு முகாம் மூடல்!

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கமைய, அச்செழு, சுன்னாகம், உடுவில் மற்றும் அரியாலை போன்ற பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவுள்ளனர். இதன் முதற்கட்டமாக அச்செழு பிரதேசத்திலிருந்து இம்மாத இறுதிக்குள் இராணுவத்தினர் வெளியேறவுள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் இராணுவம்,பலாலி இராணுவ தலைமையகத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் ரணகுரு – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இந்நிலையில்,அச்செழு பிரதேசத்திலுள்ள இராணுவ தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பலாலி இராணுவ தலைமையகம் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.
யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்துக்கு அடுத்த நிலையில் பாதுகாப்பான இராணுவத் தளமாக இருந்து வந்த அச்செழு இராணுவ முகாம், நீர்வேலி மகசின் வீதியை மத்தியாகக் கொண்ட பிரதேசமாகும். இதில் பொதுமக்களுக்குச் சொந்தமான 12 வீடுகளும் 21 காணித் துண்டுகளும் காணப்படுகின்றன.
முகாம் உள்ள பொருட்கள் அகற்றப்பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக முகாம் உள்ளடக்கியிருந்த வீடுகள் மற்றும் நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
இம்மாத இறுதிக்குள் அச்செழு பிரதேசத்திலிருந்து வெளியேறும் இராணுவம், பலாலி இராணுவ தலைமையகத்துக்குள் உள்வாங்கப்படும் என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
அச்செழு பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறுவதைத் தொடர்ந்து, சுன்னாகம், உடுவில் மற்றும் அரியாலை போன்ற பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறவுள்ளனர்.
இவர்களும், வடக்கிலுள்ள வேறு முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவர் என்று இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire