lundi 22 juillet 2013

கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக அல்ல : ராதாகிருஷ்ணன்

செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அதில் வியாபர நோக்கமே முன்னிற்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு தொடக்கம், நவம்பர் மாதம் வரை ஏதாவது ஒரு திகதியில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சி பயணம் தொடங்கும். பி.எஸ்.எல்.வி ராகெட் மூலம் செயற்கை கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்தப் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

பூமியிலிருந்து செயற்கை கோள் ஏவப்பட்டதும் 10 மாதங்கள் தொடர்ந்து பயணித்து, 2014ம் ஆண்டு இந்த செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

இந்த செயற்கை கோளின் எடை, 15 கிலோவாக இருக்கும். ஐந்து முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் பூமியிலிருந்து புறப்படும் போது 1,350 கிலோ எடையில் இருக்கும் நிறை படிப்படியாக குறைந்து ஒவ்வொரு பாகங்களாக அகன்று இறுதியில் வெறும் 15 கிலோவுடன் செயற்கை கோளின் மையப்பகுதி மாத்திரம் செவ்வாய்க்கு சென்றடையும்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்து செவ்வாய்க்கான ஆராய்ச்சியை தொடங்கவுள்ள ஆறாவது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவுக்கும் இத்திறன் இருக்கிறது என்பதனை இந்த ஆராய்ச்சி காண்பிக்கும். எதிர்கால பொருளாதாரம், குடியேற்ற அம்சங்களை கருத்தில் கொள்கையில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சியை இப்போதே நாம் தொடங்கிவிட வேண்டும்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி வெற்றிபெறுமானால் இன்னமும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மனிதர்கள் வாழும் நிலை தோன்றும் என்றார். இதேவேளை செவ்வாய் கிரக செயற்கைக் கோளை ஏற்றிச்செல்லும் பி.எஸ்.எல்.வி - எக்ஸ். எட், ராக்கெட்டை உருவாக்கும் பணியும் தொடங்கிவிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் கனிமங்களை ஆராயும் ஐந்து கருவிகள் இதில் பொருத்தப்படவுள்ளன. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா ரூ.450 கோடியை செலவிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று சீனா விண்ணுக்கு மூன்று செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது.  வானவியல் ஆய்வுக்காக இவை செலுத்தப்பட்டுள்ளன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire