jeudi 4 juillet 2013

சாதிவெறிக்கு பலியான தோழன் இளவரசன் ......தண்டிக்கப்படவேண்டியவர்கள் யார் ? இளவரசனின் மறைவு தற்கொலை என்று சொல்லி விட்டுவிட முடியுமா?......

                       
தர்மபுரி இளவரசன் திடீர் மரணம். ரயில் தண்டவாளத்திலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்தியாக வெளியிட்டிருக்கிற ஒரு பத்திரிகை தலைப்பில் “இளவரசன் தற்கொலை” என்று எழுதியிருக்கிறது. ஒரு கேள்விக்குறி கூட இல்லாமல். அது கொலையா, தற்கொலையா என்பதை காவல்துறையின் விசாரணைதானே (அது முறையாக நடத்தப்படுமானால்) உறுதிப்படுத்த வேண்டும். அதற்குள் காவல்துறைக்கு இப்படி அறிக்கை கொடுங்கள் என்று வழிகாட்டுவது போல் செய்தி வெளியிடலாமா?

எதுவாக இருந்தாலும் இளவரசனின் மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. திவ்யாவின் முடிவு குறித்து தனது வலிகளை வெளிப்படுத்திய இளவரசன், தன்னிடம் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு. நேற்று (ஜூலை 3) நீதிமன்றத்திற்கு வந்த திவ்யா, தான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை என்றும் தாயுடனும் சகோதரியுடனும்தான் வாழ விரும்புவதாகவும் முதலில் தான் சொன்னதைப் பத்திரிகைகள் திரித்துச்சொல்லிவிட்டதாகவும் கூறியதாக இன்று காலை வந்த செய்திகள் தெரிவித்தன, மாலையில் இளவரசனின் மரணச்செய்தி.

பிணவாடை பிடித்துப்போனவர்களாக சிலர் சமூகவலைத்தளங்களில் என்னென்னவோ எழுதத் தொடங்கிவிட்டார்கள். இளவரசனின் மரணத்தை தியாகம் என்றும் வீரமரணம் என்றும் சித்தரிப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பிவிடும் என்கிறார் ஒருவர். திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை சாதிவெறி என்று கூறியவர்கள் இந்த மரணத்தைப் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் இன்னொருவர். முற்போக்கு என்று சொல்லிக்கொண்டு காதல் திருமணத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றும் ஒருவர் கேட்டிருக்கிறார்,

திவ்யாவின் தந்தை மரணமடைந்ததே சுயமான தற்கொலையா, தூண்டப்பட்ட தற்கொலையா என்று தெளிவாக வேண்டியிருக்கிறது. திவ்யா எடுத்த முடிவின் பின்னணியில் எந்த அளவுக்கு சாதிய சக்திகளின் பலவகையான கெடுபிடி நிர்ப்பந்தங்கள் இருந்தன என்பதும் வெளிச்சத்திற்கு வரவேண்டியிருக்கிறது.

பிரச்சனை இவர்களது காதல் வென்றதா இல்லையா என்பதல்ல. காதலைச் சாக்கிட்டு அரங்கேற்றப்பட்ட சாதிவெறி அரசியலும், அதற்காக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளும்தான். தலித் மக்கள் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ, சமூக மதிப்பிலோ எந்த வகையிலும் தங்களது நிலையை உயர்த்திக்கொள்ள விடமாட்டோம் என்கிற நவீன மனுவாத அடிமைகளின் மூர்க்கம்தான். அந்த சாதிவெறி அரசியலும் வன்முறையும் மனுவாத அடிமைத்தன மூர்க்கமும்தான் கலப்படமே இல்லாமல் சமூகவலைத்தள பரபரப்புப்பதிவாளர்களிடம் எதிரொலிக்கிறது. இளவரசனின் மரணம் இவர்களுடைய மனதில் ஒரு கொண்டாட்ட உற்சாகத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இளவரசனின் மரணத்தால் சமத்துவவாதிகளின் குரல் ஒடுங்கிவிடும் என்றா நினைத்தீர்கள்? சாதியத்தின் சல்லி வேர்களையும் அடிவேரையும் எரித்து அந்தச் சாம்பலை தம் உடலில் பூசிக்கொண்டு பள்ளுப்பாடத்தான் போகிறார்கள் மனிதநேயர்களும் முற்போக்காளர்களும். அந்தச் சாம்பல் குப்பென்று மேலெழும். அதிலே இந்த வக்கிரர்கள் கண்ணைக் கசக்கிக்கொள்ளவும் நேரமில்லாமல் காணாமல்போவார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire