lundi 1 juillet 2013

வடக்கு தேர்தல் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேராது தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசுடன் முரண்பட்டுக் கொண்டுள்ள பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹசன்அலி மாகாண சபை தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவோர் அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டில்லை. நிபந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனித்துவமான கட்சி. எனவே, மாகாண சபைத் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என்றார்.
 இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து மாகாண சபை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார். தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

Aucun commentaire:

Enregistrer un commentaire