jeudi 11 juillet 2013

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றும் அரசாங்கம்;சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி வெற்றியளிக்காது என்று சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் பீபீசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
அரசாங்கம் ஒரு புறத்தில் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சிக்கிறது. மறுபுறத்தில் அது தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. இது அர்த்தமற்ற செயல்.
அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான வழியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பொன்றை அரசாங்கம் இழந்து வருகிறது.
உள்நாட்டில் இவ்வாறான நிலையை ஏற்படுத்தி விட்டு, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயலுகின்றது. ஆனால் சர்வதேசத்தை தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire