jeudi 11 juillet 2013

கிழக்கு மாகாண சபையை வதங்க வைத்த பெருமை த.தே.கூட்டமைப்பையே சாரும் -முன்னாள் கிழக்கு முதல்வர்

1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்; பிரகாரம் அமையப்பெற்ற வடகிழக்கு மாகாண சபை துரதிஸ்டவசமாக 1989ல் கலைந்து விட்டது. அதன் பின்பு சுமார் 18 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை அமையப்பெற்று அதாவது நிலத்திலே புதையுண்டு கிடந்த கிழக்கு மாகாண சபை என்கின்ற விதை சற்று துளிர்விடத் தொடங்கியது.
2008ம் ஆண்டு இடம் பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் கிழக்கு மாகாண சபை மீண்டும் மக்களுக்காய் மலர ஆரம்பித்தது. அப்போது நான் முதலமைச்சராக பதவி ஏற்று சுமார் 4 வருடங்கள் மிகவும் அமைதியானதும் ஜனநாயகம் நிறைந்ததுமான ஓர் ஆட்சியை நடாத்தி வந்தேன்.அவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே அனைத்தையும் இழந்து தவிர்த்த எம் மாகாண மக்களுக்கு இயன்றளவு சேவையாற்ற உதயமான கிழக்கு மாகாண சபையை இல்லாதொழிக்க பலவகையிலும் பலர் முயன்றார்கள். அதில் விசேடமானவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இவர்கள்தான் துளிர் விட்டு வளர்ந்து வந்த கிழக்கு மாகாண சபையை வாட்டி வதங்க வைத்தவர்கள் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள கரடியனாறு மகா வித்தியாலயம் 2013ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இச் சாதனைக்கு சொந்தக்காரர்களான மாணவர்கள் மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும்  கௌரவிக்கின்ற நிகழ்வு (10.07.2013) வித்தியாலயத்தின் அதிபர் செந்தில்நாதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், நான் முதலைமைச்சராக இருந்த காலத்திலே சிறுபான்மை சமூகங்களை பாதிக்கின்ற வiயிலே அமையப்பெற்ற எந்தவொரு சட்ட மூலங்களையும் ஆதரிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட அனைத்து சட்டமூலங்களையும் திருப்பி அனுப்பினோம். வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் சொல்வார்கள் எந்த பயனுமற்றதாக கிழக்கு மாகாண சபை இயங்குகின்றது எனச் சொல்வார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு தெரியும் கிழக்கு மாகாண சபை மக்களுக்காக சேவையாற்றியதா? இல்லையா? என்று, அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபை கலைந்தவுடன் பழிதீர்ப்பதற்காக தங்களது கோட்பாட்டையும் மறந்து அதாவது இணைந்த வடகிழக்கு என்கின்ற அவர்களது தாரக மந்திரத்தையும் மறந்து என்னை மீண்டும் முதலமை;சராக்கக் கூடாது என்பதற்காகவே வடக்கிலிருந்து கொண்டு கங்கணங்கட்டிக் கொண்டு இங்கு வந்து எமது மக்களைக் குழப்பி வாக்குளைச் சூறையாடினார்கள். பாவம் எமது தமிழ் மக்கள் அவர்களது வீண்பேசு;சக்கு விலைபோய்விட்டார்கள். ஆனால் அதன் விளைவை தற்போது அவர்கள் உணர்கிறார்கள்.
கிழக்கிற்கான முதலமைச்சர் யார் என்கின்ற பிரச்சினை எழுந்தபொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைத்தவர்களும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். மீண்டும் முதலமைச்சர் பதவி ஒரு தமிழனுக்கு அதுவும் எனக்கு கிடைத்துவிடும் என்பதற்காக தாங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி தர தயாராக இருக்கின்றோம் என இரா சம்பந்தன் அறிக்கை விட்டார். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த முதலமைச்சர் பதவி எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு கிடைத்தது. இது தொடர்பில் எனக்கு கவலை இல்லை என்றபோதிலும் தற்போது கிழக்கு மாகாண சபையின் இயங்கு நிலையினை பார்க்கின்றபோது மிகவும் வேதனையளிக்கின்றது.
அதுதான் நான் ஆரம்பத்தில் சொன்னேன் துளிர்விட்டு வந்த கிழக்கு மாகாண சபையை வளர்ச்சியடையச் செய்ய முயன்ற போது அதனை தடுத்து நிறுத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். தற்போதைய கிழக்கு மாகாண சபையின் இயங்கு நிலைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் அவர்கள் அப்போது அந்த அறிக்கையினை விடாமல் இருந்திருந்தால் மீண்டும் மாகாணத்தை  ஆட்சி செய்து பலமான ஓர் மாகாண சபையாக கிழக்கு மாகாண சபையை மாற்றி இருக்க முடியும்.
அண்மையில்கூட எமது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்திலே ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தோம் 13ஆவது திருத்தச் சட்டத்தினை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம். அதே வேளை 13வது திருத்த சட்டத்தினை பாதுகாக்க செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கைகோர்த்து செயற்படத்தயார் எனவும் குறிப்பிட்டிருந்தோம். அதாவது எமது கட்சியைப் பொறுத்தவரைக்கும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் என்றும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் எனவும் அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire