dimanche 7 juillet 2013

8 வயது சிறுமியை கொன்று சுவரில் புதைப்பு சிவகங்கையில் கொடூரம்

சிவகங்கை : சிவகங்கையில் சிறுமியை கொடூரமாக கொன்று சுவரில் வைத்து பூசிய சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (36). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார். இவரது மனைவி உஷா (30) பூ வியாபாரம் செய்கிறார். இவர்களுக்கு அஜய் (14) என்ற மகனும், அக்ஷயா (8) என்ற மகளும் உள்ளனர். அக்ஷயா மனநிலை குன்றியவர். தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். கடந்த 4ம் தேதி மாலை வெளியே சென்ற அக்ஷயாவை காணவில்லை. இது குறித்து அவரது தாய் உஷா சிவகங்கை டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.அக்ஷயா வீட்டின் அருகே ஒரு அமைப்பின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த அலுவலகத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் வாஷ்பேசின் கீழே உள்ள பகுதியில் புதிதாக சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த சுவரில் இருந்து ரத்தம் வெளியேறிய வண்ணம் இருந்தது. இதையடுத்து சுவர் இடிக்கப்பட்ட போது, உள்ளே ஒரு சாக்கு பையில்  சிறுமியின் பிணம் இருந்தது. 

அது அக்ஷயா என அவரது தாய் அடையாளம் காட்டினார். இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த அமல்ராஜ் (34) என்பவர் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். அமல்ராஜை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

அமல்ராஜ் மீது சந்தேகம் வந்தது ஏன்?

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டுகுடியை சேர்ந்தவர் அமல்ராஜ். உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகளிடம் ஏழை என கூறி அவர் அந்த அலுவலகத்தில் தங்கி வந்தார். கேட்டரிங் தெரிந்ததால் அலுவலகம் முன்பாக சூப், பிரியாணி போன்ற உணவு வகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். ஜட்டியுடன் வெளி இடங்களில் திரிவது போன்ற விநோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது நடவடிக்கை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்தில் இருந்து நிறுத்தப்பட்டார். 

நிர்வாகிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள வீட்டில் கொடுத்து வைத்திருந்தனர். ஏற்கனவே உள்ள பழக்கத்தை பயன்படுத்தி சாவியை வாங்கி அமல்ராஜ் அந்த அலுவலகத்தில் தங்கி வந்துள்ளார். அக்ஷயா காணாமல் போன அன்று அருகில் இருந்தவர்கள் அந்த அலுவலகத்தில் தேட சென்றுள்ளனர். 
அப்போது நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகே அமல்ராஜ் அவர்களை அனுமதித்துள்ளார். சரியாக தேடாததால் அக்ஷயாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த அலுவலகத்தில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியதும், நேற்று முன்தினத்தில் இருந்து அமல்ராஜ் தலைமறைவானார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire