lundi 8 juillet 2013

சீனத் தலையீட்டை முறியடிக்க சிறிலங்கா, மாலைதீவுடன் உடன்பாடு செய்கிறது இந்தியா

இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், கால்பதிக்கும் சீனாவின் மூலோபாயத் திட்டத்தை முறியடிக்கும் நடவடிக்கையாக, மாலைதீவு மற்றும் சிறிலங்காவுடன் இந்தியா, முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. 

புதுடெல்லியில் இருந்து வெளியாகும் டெக்கன் ஹெரால்ட் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 

மாலைதீவு மற்றும் சிறிலங்காவுடன் இந்த உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தி, வரைவு உடன்பாட்டைத் தயாரிப்பதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு செல்லவுள்ளார். 

கடல்சார் பாதுகாப்பு, தகவல் பகிர்வு, இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில் தேடுதல் மற்றும் மீட்பு, பொருளாதார கடல்எல்லைகளைக் கண்காணிப்பது, கடல் எண்ணெய் மாசு, பயிற்சி மற்றும் ஒத்திகைகள் தொடர்பான ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியாக, சிவ்சங்கர் மேனனின் பயணத்தின் போது, இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும். 

இந்தப் பயணத்தின் போது சிவ்சங்கர் மேனன், சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச்செயலரையும் சந்தித்துப் பேசவுள்ளார். 

கொழும்பு மற்றும் மாலைதீவுடன் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியிலேயே இந்தியா இந்த கடல்சார் ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ளவுள்ளது. 

மாலைதீவில் சீனா 2011இல் தூதரகம் ஒன்றை அமைத்ததுடன், அபிவிருத்தித் திட்டங்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறது. 

இது இந்தியாவுடன் அந்த நாடு கொண்டிருந்த அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதுபோலவே சிறிலங்காவிலும் சீனாவின் தலையிடுகள் அதிகரித்துள்ளதால், இந்தியாவினது நலன்கள் கேள்விக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire